துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற புரட்சியில் குதித்த ராணுவம்... முறியடித்த அரசு!
அங்காரா: துருக்கியில் ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் முயற்சித்ததால் அங்கு பதற்றம் உருவானது. சில மணிநேரங்களிலேயே மக்கள் ஆதரவுடன் ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்தார். ராணுவத்தில் மிக குறைந்த நபர்கள் எடுத்த முயற்சி, இது முறியடிக்கப்பட்டதாகவும் அதிபர் தெரிவித்தார். ஆட்சியைக் கைப்பற்ற ராணுவ முயற்சியை அடுத்து புதிய படைத்தளபதியை நியமித்திருக்கிறார் அதிபர் எர்டோகன்.
துருக்கி நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். துருக்கியில், கடந்த 1960 முதல் மூன்று ராணுவ புரட்சிகளை கண்டுள்ளது. தற்போது அடுத்த ராணுவ புரட்சியும் அங்கு வெடித்தது. துருக்கி அதிபராக கடந்த 2002ம் ஆண்டில் எர்டோகன் பதவியேற்றார். அதிலிருந்து அந்நாட்டில் ஜனநாயக மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரம் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அவர் முயற்சிப்பதாகவும், பேச்சு, கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
எர்டோகன் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு ராணுவ தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, பலருக்கு தண்டனை வழங்கியுள்ளார். . துருக்கியில், அமெரிக்க அதிபர் ஆட்சியை போன்று அரசியலமைப்பை மாற்ற நினைத்தார் அதிபர் எட்டோகன். இதன் மூலம் அவரது ஆதரவாளர்கள் பலர் அவரை விட்டு விலகிச் சென்று விட்டனர்.
ஆசியா, ஐரோப்பிய கண்டங்களுக்கு இடையில் உள்ள துருக்கி நாட்டில் ஜனாதிபதி எர்டோகன் தலைமையில் ஆட்சி நடந்து வந்தது.நேற்று அவர் விடுமுறையை கழிப்பதற்காக துருக்கியில் உள்ள கடற்கரை சுற்றுலா தலமான மர்மாரிஸ் எனும் பகுதிக்கு சென்றிருந்தார்.
தலைநகர் அங்காராவில் ஜனாதிபதி எர்டோகன் இல்லாத சூழ்நிலையில் துருக்கியில் நேற்று மாலை திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டது.
துருக்கியில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
துருக்கியில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், அந்நாட்டு தலைநகர் ஆங்காராவில் உள்ள அரசு மாளிகை ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்றும் அந்நாட்டு ராணுவம் அறிவித்தது.
சர்வாதிகார ஆட்சி துருக்கியில் சர்வாதிகார ஆட்சி அதிகரித்து வருகிறது என்றும், தீவிரவாதம் பெருகி வருகிறது என்றும் மேற்கோள்காட்டி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு தொலைக்காட்சி குறிப்பிட்டது.
ஊரடங்கு உத்தரவு
துருக்கியில் ஆங்காங்கே குண்டு வெடிப்பு சம்பவங்களும், துப்பாக்கி சூடுகளும் நடப்பதால் அந்நாட்டில் பதற்றம் நிலவுகிறது. மேலும், அந்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதளங்கள், சமூக வளைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
17 பேர் பலி
அந்நாட்டுத் தலைநகர் ஆங்காரவின் புறநகர் பகுதியில் உள்ள காவல்துறை சிறப்புப் பிரிவு தலைமையகத்தில் நிகழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர் தாக்குதலில் அந்நாட்டு அதிகாரிகள் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்தியர்களுக்கு அறிவுரை
துருக்கி நாட்டில் பதற்றம் அதிகரித்து உள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் யாரும் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும், நிலைமை கட்டுக்குள் வரும் வரை, வீட்டினுள் இருக்குமாறும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
கடும் சண்டை
துருக்கி பாராளுமன்றம் மீது இராணுவத்தினர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்கள் நடத்தினர்.இஸ்தான்புல் நகரில் உள்ள தஸ்கின் சதுக்கம் அருகே போலீசார் மற்றும் இராணுவத்தினர் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்தனர்.
வீதியில் இறங்கிய மக்கள்
நாட்டை ராணுவப் பிடியில் இருந்து மீட்க மக்கள் வீதியில் இறங்கிப் போராடுமாறு துருக்கி அதிபர் எர்டோகன் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து எர்டோகனின் ஆதரவாளர்கள் ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர்.
ராணுவ புரட்சி முறியடிப்பு
ராணுவம் மற்றும் போலீஸ் இடையே நடைபெற்ற மோதலில் 60 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கியை முழுமையாக தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தாக ராணுவம் தெரிவித்து இருந்தது. ஆனால் ஆட்சியை கைப்பற்ற நினைத்த ராணுவத்தின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக என்று அந்நாட்டு பிரதமர் பினாலி எல்ட்ரீம் தெரிவித்தார்.
அதிபர் அறிவிப்பு
துருக்கியில் ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்தார். ராணுவத்தில் மிக குறைந்த நபர்கள் எடுத்த முயற்சி, இது முறியடிக்கப்பட்டதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார். பொறுப்பு ராணுவ தளபதியாக பினாலி இல்திரிம் என்பவர் நியமிக்கப்பட்டார். ராணுவ ஆட்சிக்கு சதி செய்ததாக 724 ராணுவ வீரர்களை அரசு கைது செய்துள்ளது.