பெய்ரூட்டில் இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 43 பேர் பலி, 239 பேர் காயம்
பெய்ரூட்: லெபனானில் உள்ள பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் நடந்த இரட்டை தற்கொலைப்படை தீவிரவாத தாக்குதலில் 43 பேர் பலியாகியுள்ளனர், 239 பேர் காயம் அடைந்துள்ளனர்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறந்கர் பகுதியான புர்ஜ் அல் பரஜ்னே பகுதியில் வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 43 பேர் பலியாகியுள்ளனர், 239 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஹிஸ்புல்லா அமைப்பினரின் கோட்டையான அந்த பகுதியில் ஷியா முஸ்லீம்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். ஷியா அமைப்பான ஹிஸ்புல்லா சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போராடி வருகிறது.
இந்நிலையில் இந்த இரட்டை தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எத்தனை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது தெளிவாக தெரியவில்லை.
இது குறித்து லெபனான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஒரு தீவிரவாதி ஷியா மசூதிக்கு வெளியே தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். மற்றொரு தீவிரவாதி பேக்கரி அருகே தான் வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். மூன்றாவது தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்யும் முன்பு பலியாகியுள்ளார்.
இரண்டாவது நபர் நடத்திய தாக்குதலில் அந்த தீவிரவாதி பலியாகியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது என்றார்.