ஈராக் தலைநகரில் அடுத்தடுத்த பயங்கர குண்டுவெடிப்பு.. தற்கொலை படை தாக்குதலில் 20 பேர் பலி, பலர் காயம்
பாக்தாக்: ஈராக் தலைநகர் பாக்தாக் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஈராக் தலைநகர் பாக்தாக்கிலுள்ள சந்தையில் இன்று மதியம் நடந்த பயங்கரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாக்தாக் சந்தையில் இரட்டை குண்டுவெடிப்பு நடைபெற்றதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முதல் குண்டுவெடிப்பு
பாக்தாக் சந்தைக்குள் நுழைந்த முதல் தற்கொலைப் படை பயங்கரவாதி தனக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து மக்கள் அவரைச் சுற்றி ஒன்றுகூடியுள்ளனர். அப்போது அவர், தன்னிடம் இருந்து வெடிபொருட்களை வெடிக்கச் செய்துள்ளார்.
இரண்டாம் குண்டுவெடிப்பு
இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்க அக்கம்பக்கத்தினர் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த இரண்டாவது தற்கொலைப் படை பயங்கரவாதி, தன்னிடம் இருந்து குண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம்
இத்தாக்குதலைத் தொடர்ந்து மீட்புப் படையினரும் பாதுகாப்புப் படையினரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். இதையடுத்து பாக்தாக் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உயிரிழப்ப அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஐஎஸ் பயங்கரவாதிகள்
கடந்த 2017ஆம் ஆண்டு ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டனர். அதற்குப் பின் அங்கு நடைபெறும் தற்கொலைப்படை தாக்குதல் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு முன் கடைசியாக, கடந்த 2018ஆம் ஆண்டு பாக்தாக்கில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது.