டயமோன்ட்ரா, யூனிஸ்... ஜனவரியில் இந்தியப் பெருங்கடலை 'சத்தமில்லாமல்' கலக்கிய இரண்டு புயல்கள்!
நியூயார்க்: கடந்த ஜனவரி மாதம் ஒரே சமயத்தில் இந்தியப் பெருங்கடலில் இரண்டு புயல்கள் எழுந்தன. இந்த புயலால் நிலப் பகுதிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்ற போதிலும் அந்த இரண்டு புயல்களும் அருகருகே நெருங்கி வந்த காட்சியை செயற்கைக் கோள்கள் படம் பிடித்து பிரமிப்பூட்டியுள்ளன.
அந்தப் புயல்களின் பெயர்கள் டயமோன்ட்ரா மற்றும் யூனிஸ்.
இந்தப் புயல்கள் பெரிய அளவில் வலுவடையவில்லை. ஜனவரி 28ம் தேதி இந்தப் புயல்களை ஈமெட்சாட் பராமரிப்பின் கீழ் இருந்து வரும் செயற்கைக் கோள்கள் இந்த புயல்களைப் படம் பிடித்துள்ளன. ஜப்பானின் வானிலை ஆய்வுக் கழகமும் இது தொடர்பான தகவல்களை சேகரித்துள்ளது. இவற்றைக் கொண்டு இரு புயலக்ளும் நெருங்கி வரும் படம் இணைக்கப்பட்டு வெளியாகியுள்ளது.
இந்த இரு புயல்களும் கிட்டத்தட்ட 1500 கிலோமீட்டர் இடைவெளியில் நெருங்கியிருந்தன. இந்த இரண்டு புயல்களில் வலுவானது யூனிஸ்தான். அதற்கு மேற்கே டயமோன்ட்ரா புயல் நிலை கொண்டிருந்தது. யூனிஸ் புயலால் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசிக் கொண்டிருந்தது. டயமோன்ட்ரா புயலால் மணிக்கு 100 கிலோமீட்ர் வேகத்தில் காற்று வீசியது. இரண்டுமே தென் கிழக்காக நகர்ந்து வந்தன.
இந்த இரண்டு புயல்களும் ஒருங்கிணையவில்லை. அருகே வந்தன. இரண்டும் ஒன்று சேர்ந்திருந்தால் அதற்கு ப்யூஜிவேரா எபக்ட் என்று பெயராம். சில நேரங்களில் இப்படி இரு புயல்களும் ஒருங்கிணையும் வாய்ப்புகள் ஏற்படுமாம். அவற்றின் மையப் பகுதி வெகு அருகே வந்தால் இரு புயல்களும் ஒன்றாக இணைந்து விடுமாம்.
ஆனால் இந்த புயல்களைப் பொறுத்தவரை இவற்றின் மையப் பகுதியானது மிகுந்த தூரத்தில் இருந்ததால் இவை இணையவில்லை என்று கூறியுள்ளார் மியாமி பல்கலைக்கழக வானிலை ஆய்வுத்துறையைச் சேர்ந்த பிரையன் மெக்நோல்டி.