வேலையை ராஜினாமா செய்தார் டுவிட்டரின் இந்திய துணைத் தலைவர் ரிஷி கார்க்!
வாஷிங்டன்: டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்தில் துணைத் தலைவராக பணியாற்றிய இந்தியரான ரிஷி கார்க் தனது பதவியினை ராஜினாமா செய்துள்ளது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
பிரபல சமூக வலைதளமான டுவிட்டரில் நி்ர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் டிக் கோச்டோலோ. இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், அவர் ராஜினாமா செய்த 2 வார இடைவெளியில் டுவிட்டர் வலைதளத்தில் நிர்வாக மேம்பாட்டு துணைத் தலைவராக இருந்து வந்த இந்தியர் ரிஷி கார்க் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் வலைதளத்தில், ''டுவிட்டர் வலைதளத்தில் நிர்வாக மேம்பாட்டு துணைத் தலைவராக கடந்த 13 மாதங்களாக பணியாற்றி வருகிறேன். இந்நிலையில், இன்று எனது பிரியா விடையை நான் தெரிவிக்கவுள்ளேன்.
நான் பதவியில் இருந்த காலத்தில், எங்களுடைய குழு சிறப்பாக செயல்பட்டு, பல டஜன் கையகப்படுத்தல் விஷயங்களை மிக சாமர்த்தியமாக நடைமுறைப்படுத்தியது. டிக் கோச்டோலோ உங்களது போற்றத்தக்க தலைமை, நகைச்சுவை போன்றவற்றுக்கு நான் தலை வணங்குகிறேன்'' என அவர் கூறியுள்ளார்.