பாக்., பிரதமர் இம்ரான்கானை கலாய்க்கும் நெட்டிசன்கள்... காரணம் அமெரிக்கா தான்
நியூயார்க்: அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு உரிய அரசு முறை வரவேற்பு அளிக்கப்படவில்லை.
3 நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்துப் பேச உள்ளார். பொதுவாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் தலைவர்கள் ராணுவ விமானத்திலோ அல்லது தனி விமானத்திலோ பயணம் செய்வது வழக்கம்.
ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானோ பயணிகள் விமானமான 'கத்தார் ஏர்வேசில்' பயணம் செய்தார். சிக்கன நடவடிக்கையாக, பயணிகள் விமானத்தில் இம்ரான்கான், பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். அவரது இந்த மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் அமெரிக்க எம்.பி.க்களையும், 'கார்பரேட்' தலைவர்களையும், அமெரிக்க வாழ் பாகிஸ்தான் மக்களையும் சந்திக்க இருக்கிறார். டல்லாஸ் விமான நிலையத்தில் இறங்கிய இம்ரான்கானை வரவேற்க அமெரிக்க அதிகாரிகள் யாரும் வரவில்லை.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி, மற்றும் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆசாத் எம் கான் ஆகியோர் மட்டுமே வரவேற்றதாகவும், அவர் மக்களுடன் சேர்ந்தே விமான நிலையத்தை விட்டு வெளியேறியதாகவும், கூறி பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.
இது இணையதளங்களில் நகைப்புக்குள்ளாகியுள்ளது. பலரும் பலவிதமாக கிண்டலடித்து வருகின்றனர். பாகிஸ்தான் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படவில்லை என்பதற்காக இவ்வளவு பெரிய தண்டனை கூடாது என டிவிட்டரில் ஒருவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார். பயணிகள் விமானத்தில், இம்ரான்கான் அமெரிக்கா சென்றதையும், பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்பும், இம்ரான்கானும் முதல் முறையாக அமெரிக்காவில் சந்தித்து பேசுகிறார்கள். அத்துடன் பாகிஸ்தானின் இரு ராணுவ உயர் அதிகாரிகள், பிரதமருடன் அமெரிக்கா சென்று இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.