1000 ஆண்டு பழமையான 2 மம்மிகள் பெரு கல்லறையில் கண்டுபிடிப்பு
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடு பெரு. அந்நாட்டின் தலைநகர் லிமாவின் புறநகர் பகுதியில் உள்ள வழிபாட்டு தலம் ஒன்றில் 2.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் பழங்கால கல்லறை தோட்டம் ஒன்று உள்ளது.
கடந்த 1981-ம் ஆண்டு முதல் இங்கு அகழ்வாராய்ச்சி நிபுணர்கள், அங்குள்ள பல கல்லறைகளை தோண்டி ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு கல்லறைக்குள் 2 மம்மிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், ஒன்று வயதான பெரியவருடையது, ஒரு குழந்தையின் உடலாகும்.
ஆராய்ச்சியில், அவை 1000 ஆண்டுக்கு முந்தைய பழமையானது என அறியப்பட்டுள்ளது. அமர்ந்த நிலையில் உள்ளன அந்த மம்மிகள். பெரியவர் இறந்த பின்னர் குழந்தையை கடவுளுக்கு பலி கொடுத்து புதைத்து இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்த மம்மிக்களுடன் சேர்த்து கினியா நாட்டு பன்றிகள் வேலைப்பாடு மிக்க ஜாடிகளில் வைத்து புதைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் அவற்றின் எலும்புகளை ஜாடிக்குள்ளிருந்து மீட்டுள்ளனர்.
கடந்த 2010-ம் ஆண்டு ஒரு கல்லறையில் பெண் மற்றும் 4 குழந்தைகளின் எலும்பு கூடுகளும், ஒரு இளம் பெண்ணின் எலும்பு கூடுகளும் இருந்ததை அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.