டைனிங் டேபிளில் துப்பாக்கிச் சூடு ... தம்பி பலி, அண்ணன் படுகாயம்.. சுட்ட சிறுவனும் தற்கொலை!
புளோரிடா: அமெரிக்காவில் சாப்பிடும் போது ஏற்பட்ட சண்டையில் 13 வயது சிறுவன் ஒருவன், தனது அண்ணனையையும், தம்பியையும் சுட்டு விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஹுட்சன் நகரில் தாய் ஒருவர் தனது நான்கு மகன்களுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று, தாயார் பணிக்குச் சென்று விட, மூத்த மகனும் வெளியில் சென்று விட்டார். வீட்டில் இருந்த மற்ற மூன்று மகன்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சாப்பாட்டை பகிர்ந்து கொள்வதில் சகோதரர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. சண்டையால் ஆத்திரம் அடைந்த 13 வயது சிறுவன், வீட்டில் இருந்த துப்பாக்கியால் தனது 6 வயது தம்பி மற்றும் 16 வயது அண்ணனை நோக்கி சரமாரியாகச் சுட்டான். பின்னர், பயத்தில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயமடைந்த 6 வயது தம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். குண்டடி அடைந்த அண்ணனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.