''நாங்களும் மண்டேலா மகள்கள் தான்''.. 2 பெண்களால் பரபரப்பு
ஜோகன்னஸ்பெர்க்: மறைந்த முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மகள்கள் என்று இரண்டு பெண்கள் உரிமை கோரியுள்ள சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
சொத்துக்களுக்காக தாங்கள் மண்டேலாவின் மகள்கள் என்று உரிமை கோரவில்லை என்றும் அந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தனது 95 வது வயதில் கடந்த டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார். சமீபத்தில் இவரது உயில் வெளியிடப்பட்டது. அதில் தனது சொத்துக்களை தனது வாரிசுகள். உதவியாளர்கள் மற்றும் கட்சிக்கு எழுதி வைத்துள்ளார். அதன்படி மண்டேலாவுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 3 பேர் இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரது மகள்கள் என உயிலில் அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்படாத 2 பெண்கள், மண்டேலாவை தங்களின் தந்தை என்று உரிமை கோரியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் பெயர் போபுளூ (63). இவர் கடந்த 1992-ம் ஆண்டே தான் மண்டேலா மகள் என்றும், தனது பாட்டி சொல்லித்தான் இது தெரியும் என்றும் தெரிவித்து இருந்தார். மேலும் மண்டேலாவை சந்திக்க அவர் முயன்றார். ஆனால் இறுதிவரை, அது முடியாமல் போனது. இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு பக்கவாத நோயால் அவர் இறந்தார்.
இந்த நிலையில் தற்போது ஒனிகா மொதாவோ (60) என்ற பெண்ணும் மண்டேலா தனது தந்தை என உரிமை கோரியுள்ளார். ‘டி.என்.ஏ' பரிசோதனை மூலம் அவரது மகள் என்பதை நிரூபிக்க தான் தாயராக இருப்பதாக கூறியுள்ளார்.
அவரது சொத்து தனக்கு தேவையில்லை என்றும், தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு இந்த விவரம் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த உரிமை கோருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை மண்டேலாவின் உயிலை செயல்படுத்தும் மிச்சேல் கேட்சிடம் கூறியுள்ளார். மண்டேலா, எவ்வின் மசே என்பவரை முதலில் திருமணம் செய்தார். அதற்கு முன்பு வேறு பெண்களுடன் ஏற்பட்ட தொடர்பு மூலம் இவர்கள் பிறந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.