கர்ப்பிணிகள் தினமும் 2 கப் காபி குடித்தால் குழந்தைகளுக்கு லுகேமியா ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
நியூயார்க் : கர்ப்ப காலத்தில் பெண்கள் தினந்தோறும் இரண்டு கப் காபி குடித்தால், அவர்களது வயிற்றில் வளரும் குழந்தைக்கு லுகேமியா நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பொதுவாக கர்ப்பிணிகள் அதிகளவு நீர் குடிப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர். ஆனால், வாந்தி, குமட்டல் காரணமாக வெறும் நீராக குடிக்க இயலாத பெண்கள் காபி, டீ மற்றும் குளிர்பானங்களாக குடிக்கின்றனர்.
ஆனால், இவ்வாறு கர்ப்பிணிகள் அதிகளவு காபி குடிப்பது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நல்லதல்ல என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஏனெனில் அதன் மூலம் லுகேமியா என்ற ரத்த புற்றுநோய் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக அமெரிக்க மகப்பேறியல் நாளிதழில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
முந்தைய ஆய்வுகள்...
இதற்கு முன்னர் நடத்தப்பட்ட 20 ஆய்வுகளின் அடிப்படையில் தற்போது இத்தீர்மானத்திற்கு வந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
எச்சரிக்கை...
இதன் மூலம் கர்ப்பிணி பெண்கள் காபி குடிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிப்பதையும் முற்றும் அவர்கள் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
டி.என்.ஏ. மாற்றம்...
ஏனெனில், காபியில் உள்ள நச்சு கரு செல்களில் டி.என்.ஏ. மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும், அது ரத்த புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
லுகேமியா பாதிப்பு...
கர்ப்பிணியாக இருக்கும்போது ஒரு பெண் 2 கப் காபி குடிப்பது என்பது 20 சதவீதம் லுகேமியா பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், 60 சதவீதம் குழந்தைகள் லுகேமியா பாதிப்புடனேயே பிறப்பதாகவும் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
குழந்தைப் பருவ புற்றுநோய்...
இங்கிலாந்தில் வருடத்திற்கு சுமார் 500 குழந்தைகள் லுகேமியாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் இது மிகவும் பொதுவான குழந்தை பருவத்தில் உள்ள புற்றுநோய் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபி வேணாமே....
ஆரம்பத்திலேயே இதனை கண்டறிந்து கீமோதெரபி மூலம் சிகிச்சை அளித்தால் 80 சதவீதம் குணப்படுத்திவிடலாம். என்றபோதும், கர்ப்ப காலங்களில் காபியை குறைத்து கொள்வது நல்லது என்றே ஆய்வில் பங்குகொள்ளாத பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் மனித கதிர்வீச்சு விளைவுகள் ஓய்வுபெற்ற பேராசிரியரான டெனிஸ் ஹென்சாவ் தெரிவித்துள்ளார்.