லிபியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய 2 இந்திய பேராசிரியர்கள்.. ஓராண்டுக்கு பிறகு மீட்பு
டெல்லி: லிபியா நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இரு இந்திய பேராசிரியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
லிபியாவில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 4 இந்தியப் பேராசிரியர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களில் 2 பேர் அடுத்த சில நாட்களில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் 2 பேர் பிணை கைதிகளாக இருந்த நிலையில் தற்போது ஆபத்தின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பேராசிரியர்கள்
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பலராம், கோபி கிருஷ்ணா ஆகிய இருவரும், கடந்த 8 ஆண்டுகளாக லிபியா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள்.
கர்நாடக உதவி பேராசிரியர்கள்
கர்நாடகாவை சேர்ந்த லட்சுமி காந்த், விஜயகுமார் ஆகியோர் அதே பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
கடத்தல்
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலையில் இவர்கள் நான்கு பேரும் இந்தியா செல்ல விமானம் நிலையத்துக்கு புறப்பட்டனர். அப்போது, லிபிய தலைநகர் திரிபோலியில் இருந்து 4 பேரும் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். இதையடுத்து இந்திய உள்துறை அமைச்சகம், லிபிய தூதரக அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரியது.
இருவர் மட்டும் விடுவிப்பு
இந்நிலையில், தீவிரவாதிகளுடன் லிபியா அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த சில நாட்களிலேயே விஜயகுமார், லட்சுமிகாந்த் ஆகிய இருவரை தீவிரவாதிகள் விடுவித்தனர்.
இப்போது விடுதலை
பலராம், கோபி கிருஷ்ணா ஆகிய இருவரும் விரைவில் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓராண்டு கடந்த நிலையில், கடும் முயற்சிக்கு பிறகு இருவரும் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.