யு.எஸ்.: நடுவானில் மோதிச் சிதறிய எப்-16, செஸ்னா விமானங்கள்: 2 பேர் பலி
நியூயார்க்: அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் எப்-16 ரக போர் விமானமும், செஸ்னா விமானமும் வானில் பறக்கையில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். எப்-16 விமானி பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கினார்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தின் சும்தர் நகரில் உள்ள ஷா விமானப் படை தளத்தில் இருந்து எப்-16 ரக போர் விமானம் நேற்று பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது அந்த விமானமும் 2 இருக்கைகள் கொண்ட செஸ்னா விமானமும் சார்ல்ஸ்டன் நகரில் நடுவானில் மோதி வெடித்துச் சிதறின.
இரண்டு விமானங்களும் எங்கு சென்று கொண்டிருந்தன என்ற தகவல் தெரியவில்லை. இந்த விபத்தில் செஸ்னா விமானத்தில் இருந்த 2 பேர் பலியாகினர். எப்-16 விமானி பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கினார்.
விமானங்களின் பாகங்கள் அந்த பகுதி முழுவதும் சிதறிக் கிடந்தது. பாகங்கள் விழுந்து சார்ல்ஸ்டன் பகுதியில் எந்த வீடுகளும் சேதம் அடைந்ததாக தகவல் இல்லை. விமானங்கள் எப்படி விபத்துக்குள்ளாகின என்ற விபரமும் இன்னும் தெரியவில்லை.
1970களில் இருந்து விமானப் படை எப்-16 விமானங்களை பயன்படுத்தி வருகிறது. ஆனால் தற்போது சில விமானிகள் மட்டும் அந்த விமானங்களை இயக்குகிறார்கள். ஷா விமானப் படை தளத்தில் இருந்து எப்-16 விமானங்கள் தினமும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
நேற்று விபத்துக்குள்ளான மற்றொரு விமானம் செஸ்னா 150 ரகம் ஆகும். இரண்டு இருக்கைகள் கொண்ட அந்த ரக விமானங்கள் 1959ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.