பள்ளிக் குழந்தைகளுக்கு சரமாரி கத்திக்குத்து... ஜப்பானில் மர்மநபர் வெறிச்செயல்
டோக்கியோ: ஜப்பானில் பொதுஇடத்தில் கூடியிருந்தவர்களை மர்ம நபர் சரமாரியாக கத்தியால் குத்தியதில், 2 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர்.
ஜப்பான் நாட்டின் கவாசாகி நகரின் நோபோரிடோ பகுதியில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அந்த பூங்காவில் குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு தரப்பினர் கூடியிருந்தனர். பூங்கா அருகே, ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளது.
இந்நிலையில், அந்த பூங்காவுக்குள் நுழைந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். மேலும், பள்ளி பேருந்துக்காக காத்திருந்த குழந்தைகளையும், அவர் துரத்தி, துரத்தி குத்தினார். இந்த தாக்குதலில் 8 குழந்தைகள் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர். மேலும், இளம் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
அசாமில் பாஜகவுக்கு அமோக வெற்றி.. வடகிழக்கிலும் வாரி சுருட்டியது எப்படி? காரணம் இதுதான்
மர்ம நபரின் இந்த செயலால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அந்த மர்மநபரை சுற்றிவளைத்து பிடிக்க முயன்ற போது, அவர், தன்னை தானே கழுத்தில் கத்தியால் குத்திக் கொண்டார்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இரண்டு கத்திகள் கைப்பற்றபட்டுள்ளதாகவும், தாக்குதலில் ஈடுபட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
எதற்காக இந்த வெறிச் செயலில், மர்மநபர் ஈடுபட்டார் என்பது உடனடியாக தெரியவில்லை. தாக்குதல் நடத்திய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது வேரெதும் காரணமா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல், கடந்த 2016 ல், ஊனமுற்றோருக்கான பாதுகாப்பு இல்லத்தில் கத்தியால் குத்தி 19 பேர் கொல்லப்பட்டனர். இது இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நடந்த கொடூர செயலாக பார்க்கப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் கத்துக்குத்து சம்பவம் நடந்திருப்பது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.