”பேஸ்புக் உபயோகிக்காதே” கைது செய்தவர் இறந்த வழக்கில் இரு அதிகாரிகளுக்கு 10 ஆண்டு சிறை
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்தியத் தரைக்கடல் நகரமான அலெக்சாண்டிரியாவில் உள்ள இன்டர்நெட் மையத்தில் எகிப்து நாட்டின் காவல்துறையைச் சேர்ந்த இருவர் "கலெட் செட்"என்ற முகப்புத்தக பயனாளி ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
அதன்பின்னர் அவர் இறந்துபோன செய்தி வெளிவந்தபோது மக்கள் கொதித்தெழுந்தனர். இந்தக் கொலையை மறைக்க அரசு முயற்சித்தபோது காவலர்களால் சிதைக்கப்பட்டிருந்த அவரது முகத்தின் புகைப்படம் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.
இது பேஸ்புக் பயனாளர்கள் குழு ஒன்றை உருவாக்கி அப்போதைய எகிப்து சர்வாதிகாரியாக விளங்கிய ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான கலவரங்களைத் தீவிரப்படுத்தியது.
18 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மக்களால் வெறுக்கப்பட்ட முபாரக்கின் காவல்துறையை விரட்டி அவரது பதவி இறக்கத்திற்கும் வழி வகுத்தது.
அதன்பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய முகமது மோர்சியும் சென்ற ஆண்டு பதவி இறக்கப்பட்டு அந்நாடு அமைதியின்றி கலவரங்களால் கொந்தளித்துக் கிடக்கின்றது. இது முபாரக் காலத்திய சர்வாதிகார ஆட்சியும், காவல்துறையின் பொறுப்பற்ற கொடுமை நடவடிக்கையும் அங்கு மீண்டும் தோன்றுவதற்கான அச்சத்தைப் பல மனித உரிமை ஆர்வலர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி தற்போதைய அரசு மோர்சியின் ஆதரவாளர்களை மட்டுமின்றி அவருக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்திய இளைய தலைவர்களையும் கைது செய்து காவலில் வைத்துள்ளது.
இந்த நிலையில் செட்டின் மரணத்திற்குக் காரணமாக இருந்த மஹ்மூத் சலா மஹ்மூத் மற்றும் ஆவாத் இஸ்மாயில் சுலைமான் என்ற இரு காவலர்கள் மீதும் நடத்தப்பட்ட மறு விசாரணையில் புதிய அரசு அவர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு முன்னால் கடந்த 2011ஆம் ஆண்டு இவர்களுக்கு ஏழு வருட சிறைத் தண்டனை அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.