"வாய்க்கு எட்டலையே".. ஒரே நொடியில் பில்லியனர்களான இரண்டு பேர்.. ஆனால் அடுத்த நிமிடமே நடந்த சோகம்!
ஹாங்காங்: சமீபத்தில், ஹாங்காங்கை சேர்ந்த இரு நிறுவனங்களின் பங்கு மதிப்பு திடீரென உயர்ந்த நிலையில் அந்நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் பில்லியனர்களாக பரிணமித்தனர்.
ஆனால் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்ட இறக்கம் அவர்களை திடீரென கீழுக்கு தள்ளியுள்ளது. இதனால் அவர்கள் சாதாரண நிறுவனங்களின் பட்டியலில் மீண்டும் சேர்ந்துள்ளனர்.
பங்கு சந்தைகளில் வர்த்தகம் என்பது ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். இதில் முதலீடு செய்பவர்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.
பீமா கொரோகான் வழக்கில் வரவர ராவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.. 4 ஆண்டுகள் கழித்து விடுதலை
உயர்வு
இந்நிலையில், ஹாங்காங்கை சேர்ந்த மேஜிக் எம்பயர் கோல்டு லிமிடெட் நிறுவனம் இதற்கு ஒரு பெரிய உதாரணமாக திகழ்ந்திருக்கிறது. பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு எழுத்துறுதி (underwriting) மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த நிறுவனத்தில் பங்குகள் அமெரிக்காவில் அறிமுகமானதில் இருந்து 6,149% வரை உயர்ந்து, ஒரு கட்டத்தில் $5 பில்லியன் சந்தை மதிப்பைக் கொடுத்தது. இது எதிர்பாராத திருப்பமாகும். இதர முதலீட்டாளர்கள் இதைக் கண்டு வாயை பிளந்தனர்.
வீழ்ச்சி
இதன் மூலம் மேஜிக் எம்பயர் கோல்டு லிமிடெட்டின் நிறுவனர்களான 'கில்பர்ட் சான்' மற்றும் 'ஜான்சன் சென்' ஆகியோரின் பங்கு மதிப்பு முறையே $1.8 பில்லியன் மற்றும் $1.3 பில்லியன் என அதிகரித்தது. ஆனால் இது எல்லாம் கொஞ்ச நேரம்தான். ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகள் வரை இவர்கள் பில்லியனர்களாக இருந்தனர். ஆனால் செவ்வாய் அன்று, இந்நிறுவனத்தின் பங்குகள் 89% குறைந்து வெறும் 12.32 டாலர்கள் என நிலையில் வர்த்தகத்தை முடித்துக்கொண்டது.
பங்கு மதிப்பு
இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் இந்த நிறுவனம் தொடக்கத்தில் அதன் பங்குகளுக்கு வெறும் 4 டாலர்கள் என்றுதான் விலை நிர்ணயம் செய்திருந்தது என்பதுதான். பொதுவாக இவ்வாறு திடீரென உயரும் பங்குகள் அதேபோல திடீரென குறையும் என்பதே பங்கு சந்தை நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இந்த சரிவுக்கு பின்னர், பில்லியன் கணக்கில் இருந்த சான் மற்றும் ஜான்சன் சென் ஆகியோரின் பங்கு மதிப்புகள் முறையே $90 மில்லியன் மற்றும் $65 மில்லியன் ஆக குறைந்தது.
அனுபவம்
இந்நிறுவனம் கடந்த ஆண்டு இறுதி வரை தனது நிறுவனத்தில் வெறும் 9 ஊழியர்களை மட்டுமே கொண்டிருந்தது. அதேபோல இந்நிறுவனத்திற்கு பங்கு சரிவு என்பது புதிதல்ல. கடந்த 2021ல் இதன் வருவாய் 17% குறைந்து $2.2 மில்லியனாக இருந்தது. இந்த நிறுவனத்தின் தலைவரான சான், ஹாங்காங்கின் சீனப் பல்கலைக் கழகத்தின் கணக்கியல் பட்டதாரியாவார். அதேபோல இன்டர்நேஷனல் கேபிடல் லிமிடெட் எனும் பெருநிறுவனத்தின் நிதிப் பிரிவில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
அறிவுறுத்தல்
நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், சானின் முன்னாள் பல்கலைக்கழக வகுப்புத் தோழருமான ஜான்சன் சென், KPMG எனப்படும் பன்னாட்டு தொழில்முறை சேவை நெட்வொர்க்கில் ஆடிட்டராக பணியாற்றி அனுபவம் கொண்டவராவார். இவர்கள் இருவரும் Giraffe Capital Ltd., Magic Empire என இரு நிறுவனத்தை தொடங்கினர். இவர்களின் இந்த நிறுவனத்தின் பங்கு வீழ்ச்சி குறித்து குறிப்பிட்ட நிபுணர்கள், "தற்போது சந்தை நம்பத்தகாத விலை நிதி அடிப்படைகளிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டதால் முதலீட்டாளர்கள் அதிக ஊகங்களைத் (overspeculation) தவிர்க்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.