ஈரானில் இரு ரயில்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 31 பேர் பலி
ஈரானியில் இரண்டு ரயில்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.
தெஹ்ரான்: ஈரானில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 31 பேர் உயிரிழந்ததாக அம்மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷவுரத் நகரின் ஹாப்ட் கான் ரயில்வே நிலையத்தில் பயணிகள் ரயில் நின்றது. அப்போது திடீரென எதிரே வந்த மற்றொரு ரயில் நின்றுக்கொண்டிருந்த ரயில் மீது வேகமாக மோதியது. இதில் இரண்டு ரயில்களின் பெட்டிகளும் தீப்பிடித்து எரிந்தன. இதில் இதுவரை 31 பேர் உயிரிழ்ந்திருப்பதாக செம்நான் மாகாண கவர்னர் முகமது ரெஸா கப்பாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது வரை பலத்த காயமடைந்த 70 பேர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள கவர்னர், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான ரயில்களில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற தகவல் வெளிவராத நிலையில் இதுவரை 100 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கவர்னர் முகமது ரெசா கப்பாஸ் கூறியுள்ளார். விபத்து இன்று அதிகாலை ஏற்பட்டதாகவும், அப்போது பயணிகள் தூங்கிக்கொண்டிருந்ததால் அவர்களால் எளிதில் வெளியேற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்து நடந்தப் பகுதி நகரிலிருந்து தொலைவு என்பதால் மீட்புப் படையினர் சென்று சேர்வதிலும் தாமதம் ஏற்பட்டது.