தமிழ்நாட்டை அதிமுக உலுக்குது... ஹாங்காங்கை "ஹட்டோ" புரட்டி எடுக்குது.. பரபர வீடியோ!
ஹாங்காங்கை உலுக்கி எடுக்கும் ஹட்டோ புயலுக்கு இது வரை தெற்கு சீனா மற்றும் மேக்கோவில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹாங்காங் : 20 ஆண்டுகளில் இல்லாத அளவு ஹாங்காங்கில் ஏற்பட்டுள்ள அதி பயங்கர ஹட்டோ புயலால் அந்த நகரை உருக்குலைந்துள்ளது, இது வரை ஹட்டோ புயலுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆசியாவின் பொருளாதார மையம் என அழைக்கப்படும் ஹாங்காங் நகரை பத்தாம் எச்சரிக்கை எண் கொண்ட ஹாட்டோ புயல் தாக்கியது. மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த பெரும்புயலால் கடல் அலைகள் சீற்றத்துடன் நகர வீதிகளுக்குள் பாய்ந்து மோதின.
புயலின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன, மழை மற்றும் காற்றுக்கு பயந்து சாலையோரத்தில் நின்ற மக்களை புயல் காற்று தூக்கி வீசி இழுத்துச் சென்றது. சரக்கு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களையே அசாதாரணமாக புரட்டிப் போடும் பயங்கர காட்சிகள் ஒன் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
சாலைக்குள் புகுந்த கடல்நீர்
விக்டோரியா துறைமுகம் பகுதியில் ஆவேசமாக மோதி எழுந்த கடல் அலைகள், ஆர்ப்பரித்துக் கொண்டு அருகிலுள்ள சாலைகளுக்குள் சூழ்ந்துள்ளது. புயல், மழையால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
12 பேர் உயிரிழப்பு
ஹாங்காங் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சுமார் 450 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கோரப் புயலின் தாக்கத்தால் பியர்ல் ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு சீனாவில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது.
|
அலுவலகங்கள் மூடல்
ஹாட்டோ புயலின் தாக்கம் மேக்கோ நகரையொட்டியுள்ள சீனாவின் தெற்கு பகுதியிலுள்ள குவாங்டாங் மாகாணத்தையும் பதம் பார்த்துள்ளது. 20 ஆண்டுகளில் இல்லாத அளவு நகரை உருக்குலைய வைத்துள்ள ஹட்டோ புயலால் ஹாங்காங்கின் மக்காவ் நகரில் பல்வேறு வங்கிகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடிக் கிடக்கின்றன. இதே போன்று கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
|
ரயில் சேவை நிறுத்தம்
வெளியில் செல்ல முடியாத அளவு மக்காவ் நகரையொட்டியுள்ள சீனாவின் ஸுஹாய் நகரத்துக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால், சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு இங்குள்ள ஷென்ஸென் விமான நிலையத்தை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், இந்நகரை இணைக்கும் அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
|
மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்
ஹட்டோ புயலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வெள்ள நீர் சூழ்ந்த தாழ்வான பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
சேதம்
இதுகுறித்து மீட்புப்படை அதிகாரிகள் கூறுகையில், இதுவரை தற்காலிக நிவாரண முகாம்களில் 26,817 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 664 ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். சுமார் 4 ஆயிரம் மீனவர்கள் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளோம்.