33 ஆண்டுகளுக்குப் பின் ஹாங்காங்கை தாக்கிய பயங்கர சூறாவாளி "நிடா"... சீனா நோக்கி நகர்கிறது
ஹாங்காங்: ஹாங்காங்கை 33 ஆண்டுகளுக்குப் பின்னர் பயங்கர சூறாவளி தாக்கியுள்ளது. நிடா (Nida) என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி சீனாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிடாவால் ஹாங்ஹாங்கில் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்க்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் வழியாக கடந்து சென்ற நிடா சூறாவளியானது அங்கு கடந்த 1983-ம் ஆண்டுக்கு பின்னர் ஏற்படும் மிகப்பெரிய சூறாவளியாக கருதப்படுகிறது. ஹாங்ககை தாக்கிய சூறாவளி, தற்போது சீனாவின் முக்கிய பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் அங்குபெரும்பாலான செயல்பாடுகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. பலத்த காற்றின் காரணமாக, நூற்றுக்கணக்கான விமான சேவைகள், ரயில் போக்குவரத்து, படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் சீனாவில் உள்ள குவாங்கடன்னில் உள்ள மக்கள் தங்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் தேவையான இதர பொருட்களை முன்னெச்சரிக்கையாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அந்தப் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. தென் சீனாவில் பருவ மழைக் காலங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்படுவது வழக்கமான நிகழ்வு தான் என்ற போதிலும், இந்த ஆண்டு மிக மோசமான சூறாவளியாக இது கருதப்படுகிறது.
ஜூலை மாதத்தில் ப்யூஜியன் மாகணத்தில் நெபார்டக் சூறாவளி தாக்கியதில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், தைவானில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.