ரம்மாசன் புயல்: பிலிப்பைன்சில் 94 பேர் மரணம்
மணிலா: பிலிப்பைன்சில் ரம்மாசன் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.
வடக்கு பசிபிக் கடலில், கடந்த வாரம் திடீரென தோன்றிய, ரம்மாசன் சூறாவளி புயல், பிலிப்பைன்ஸ் நாட்டில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 94 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பான்மை உயிரிழப்புகள், புயலினால் ஏற்பட்ட இடிபாடுகள் மற்றும் விழுந்த மரங்களில் சிக்கி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
ரம்மாசன் என்றால், இடியின் கடவுள் என பொருள். இந்தப் புயலில் காணாமல் போனவர்கள் அனைவரும் படகுகளில் கடலுக்கு சென்றவர்கள் என பிலிப்பைன்சின் தேசிய பேரிடர் மேலாண்மை கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் மினா மராசிகன் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் துண்டிப்பு
புயல் தாக்கி ஒரு வாரம் கடந்து விட்ட பின்னரும், 4 லட்சம் பேர் மின்சார வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின்சார வசதிகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மணிலாவில் கனமழை
ரம்மாசூன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள்வதற்குள், மட்மோ என்ற புதிய புயல் காரணமாக மணிலாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சீனாவில் 18 பேர் பலி
இந்த நிலையில், ரம்மாசன் சனிக்கிழமையன்று சீனாவை பயங்கரமாக தாக்கியது. சீனாவின், ஹெய்னான் மாகாணத்தில், மணிக்கு, 100 கி.மீ.,க்கும் அதிக வேகத்தில் வீசிய சூறாவளியில், 55 வீடுகள் பலத்த சேதமடைந்தன. 60 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிந்தன.
18 பேர் பலி
ஞாயிறன்றும் அந்தப் புயல், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கோர தாண்டவம் ஆடியது. பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி, 10 பேர் இறந்ததை அடுத்து, ரம்மாசன் சூறாவளியால் இறந்தவர்கள் எண்ணிக்கை, 18 ஆக உயர்ந்துள்ளது.