41 ஆண்டுகளுக்குப் பின் தென்சீனாவைத் தாக்கிய வீரியமான புயல் ‘ரம்மசுன்’- 18 பேர் பலி!
பீஜிங்: சீனாவைத் தாக்கிய ரம்மசுன் சூறாவளிப் புயலுக்கு இதுவரை 18 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த செவ்வாயன்று பிலிப்பைன்ஸ் நாட்டை ரம்மசுன் என்ற புயல் தாக்கியது. இதில் 94 பேர் பலியானார்கள். ஆனபோதும், சீற்றம் குறையான ரம்மசுன் புயல் சீனாவையும் தாக்கியது.
சீனாவின் தெற்கு கடலோரப் பகுதியில் உள்ள ஹைனன் தீவை மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த புயலால் அப்பகுதியில் வசித்த 7 பேர் பலியாகினர்.
அங்கிருந்து வியட்நாம் நோக்கி நகரத் தொடங்கி, போகும் வழியில் சீனாவின் குவாங்சி பகுதியையும் ரம்மசுன் புரட்டிப் போட்டதில் இங்கு வசிக்கும் மேலும் 9 பேர் உயிரிழந்தனர். இரு பகுதிகளையும் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
சீனாவின் 41 ஆண்டுகால வானிலை ஆய்வு மைய வரலாற்றில் இவ்வளவு வீரியமான புயல் தெற்கு பகுதியில் இதுவரை வீசியதில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை ரம்மசுன் புயலுக்கு சீனாவில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 18ஐத் தொட்டுள்ளதாக அச்செய்திகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.