கட்டுப்பெட்டி அரபு நாடுகளை வியப்பில் ஆழ்த்திய 'சந்தனப்பெட்டி'...!
துபாய்: கட்டுப்பெட்டியான அரபு நாடுகள் அசந்து போய் ஒரு புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டுள்ளன. அந்தப் படத்தில் இருப்பவர் மேஜர் மரியம் அல் மன்சூரி.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமானப்படை வீராங்கனை, போர் விமானத்தை அனாயசமாக செலுத்தும் விமானி, எமிரேட்ஸின் முதல் பெண் விமானி என்ற பெருமையைக் கொண்டவர்.
38 வயதான இவர், சிரியாவின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்திய அரபு நாட்டுக் கூட்டுப் படை போர் விமானத்தை செலுத்திய வி்மானிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல்
இந்த வாரத்தில் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்கப் படையினருடன் இணைந்து அரபு நாடுகளின் விமானப்படையினரும் அதிரடியாக குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர்.
யார் யாரெல்லாம்
எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஜோர்டான், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளும் இதில் இணைந்து கொண்டன.
முதல் பெண் போர் விமான விமானி
இந்த தாக்குதலில் ஈடுபட்ட விமானங்களில் ஒன்றைத்தான் மரியம் செலுத்தி அசத்தியுள்ளார்.
38 வயதில் சாதனை
38 வயதேயாகும் மரியம், போர் விமானங்களை செலுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர். அமெரிக்கத் தயாரிப்பு எப் 16 ரக விமானத்தை படு வேகமாக செலுத்தி குண்டு வீசித் தாக்குவதில் கில்லாடியாம்.
இளம் வயதுக் கனவு
இளம் வயதிலேயே போர் விமான விமானியாக வேண்டும் என்பது மரியத்தின் கனவா இருந்துள்ளது. ஆனால் சட்ட திட்டங்கள் அவருக்கு சாதகமாக இருக்கவில்லை. இதனால் குறிப்பிட்ட வயதுக்கு வந்ததும்தான் அவரது கனவாக முடிந்தது.
சிரியாவில் சரமாரி குண்டுவீச்சு
தற்போது சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் நிலைகளில் குண்டு வீசித் தாக்கிய குழுவில் இடம் பெற்றிருந்த மரியம், தனி ஆளாக ரக்கா, இடிலிப், அலெப்போ ஆகிய நகரங்கள் மீது குண்டு வீசித் தாக்கி விட்டுத் திரும்பியுள்ளார்.
பெண்களை அடிமையாக்கும் ஐஎஸ்ஸுக்குப் பதிலடி
மேலும் மரியத்தை களத்தில் இறக்கியிருப்பதன் மூலம் பெண்களை செக்ஸ் அடிமைளாக்கி கொடுமைப்படுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஒரு பெண்ணைக் கொண்டே பதிலடி கொடுத்திருப்பதாக கருதப்படுகிறது.
எமிரேட்ஸ் படைக்குத் தலைவி
மேலும் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள எமிரேட்ஸ் விமானப்படையையும் இவரே தலைமை தாங்குவதாகவும் கூறுகிறார்கள்.
அபுதாபி மங்கை
மரியம், அபுதாபியில் பிறந்தவர் ஆவார். அங்குள்ள கலீபா பின் சயத் விமானப்படை கல்லூரியில் படித்தவர்.
பெண் என்பதால் பாரபட்சம் இல்லை
தனது விமானி பயிற்சி குறித்து மரியம் கூறுகையில் நான் பெண் என்பதால் எனக்கு எந்தச் சலுகையும் காட்டப்படவில்லை. ஆண் வீரர்கள், விமானிகள் என்ன மாதிரியான பயிற்சிகளைப் பெற்றார்களோ அதேதான் எனக்கும் கிடைத்தது. பாரபட்சம் பார்க்கப்படவில்லை, சலுகை காட்டப்படவில்லை என்றார்.
கட்டுப்பெட்டி அரபு நாடுகள்
பெரும்பாலான அரபு நாடுகள் இன்னும் கட்டுப்பெட்டி நாடுகளாகவே உள்ளன. குறிப்பாக சவூதி அரேபியாவில் பெண்களுக்கான உரிமைகள் மிக மிக குறைவு. அங்கு கார் ஓட்டக் கூட பெண்களுக்கு அனுமதி இல்லை. வாக்களிக்கவும் முடியாது. ஆனால் எமிரேட்ஸில் நிலைமை அந்த அளவுக்கு மோசம் இல்லை. அங்கு பெண்களுக்கு சில உரிமைகள் உள்ளன.
இங்கும் கட்டுப்பாடு இருக்கத்தான் செய்கிறது
அதற்காக எமிரேட்ஸில் பெண்களுக்கு முழுமையான உரிமைகள் உள்ளதாக கூறி விட முடியாது. இங்கு வந்து பணியாற்றும் வெளிநாட்டுப் பெண்கள் பல பிரச்சினைகளை சந்தித்து வருவதை உதாரணமாகக் கூற முடியும்.
மனைவியரை அடிக்கலாம்
எமிரேட்ஸில் மனைவியரை கணவர் அடித்தால் அது குற்றச் செயலாகாது. அதற்காக யாரிடமும் போய் முறையிடவும் முடியாது. பிற ஆண்களுடன் திருமணத்திற்குப் பின்னர் தொடர்பு வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு தண்டனை அதிகம்.
மாற்றிப் போடுவாரா மரியம்
இப்படி எமிரேட்ஸிலும் பெண்களுக்கு சிக்கல்கள் இருந்தாலும், மரியம் போன்ற துணிச்சலான வீராங்கனைகளின் செயலால் அந்த நாட்டுப் பெண்கள் முழு உற்சாகம் அடைவார்கள், எமிரேட்ஸ் பெண்களின் நிலையும் உயரும் என்ற நம்பிக்கையும் பெண்ணியவாதிகளிடம் தோன்றியுள்ளது.