ஈரான் மீதான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் பல பொருளாதாரத் தடைகள் நீக்கம்
டெஹ்ரான்: அணுசக்தி விவகாரங்களில் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தியதைத் தொடர்ந்து ஈரான் மீதான பல பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
தங்களது அணுசக்தித் திட்டங்கள் ஆக்கப்பூர்வமானவை என்பது ஈரானின் வாதம். ஆனால் அணு ஆயுதம் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈரான் ஈடுபடுகிறது என்பது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் குற்றச்சாட்டு.
இதனால் ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஈரானிடம்இருந்து கச்சா எண்ணெய் வாங்கவும் தடை விதிக்கப்பட்டது. ஈரானின் சர்வதேச வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
ஈரானுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருக்கும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கும் நிலை உருவானது. இதன் பின்னர் அணுசக்தி விவகாரத்துக்கு சுமுக தீர்வு காண்பதற்காக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியும் ஈரானுடன் பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தின.
இதனடிப்படையில் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காது என உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை சர்வதேச நாடுகள் விலக்கிக் கொள்ளவும் கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின் கீழ்சில வகை அணு ஆராய்ச்சிகளை நிறுத்துவது, அணு ஆராய்ச்சிக் கூடங்களில் சர்வதேச ஆய்வை அனுமதிப்பது ஆகியவற்றுக்கு ஈரான் ஒப்புதல் தெரிவித்தது.
இதன்படி நடைபெற்ற ஆய்வுக்குப் பிறகு சர்வதேச அணுசக்தி முகமை அளித்த அறிக்கையில், ஈரானின் செயல்பாடுகள் மீது திருப்தி தெரிவிக்கப்பட்டது. மேலும் 12,000 அணு உலைக் கருவிகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. இதனால் யுரேனியம் செறிவூட்டுவது இனி சாத்தியமில்லை என்ற நிலை உருவானது.
சர்வதே அணுசக்தி முகமையின் அறிக்கை ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன.
இந்த பொருளாதாரத் தடை நீக்கப்பட்டதை அடுத்து, கச்சா எண்ணெய் விற்பனை உள்ளிட்ட சர்வதேச வர்த்தகத்தில் ஈரான் மீண்டும் ஈடுபடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகம் மூலம் ஏற்கெனவே பெறப்பட்ட சுமார் ரூ. 6.5 லட்சம் கோடி, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் சர்வதேச வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டது. தற்போது ஈரான் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.