ஹெச்.1 பி விசா கட்டண உயர்வு... சிக்கலை சந்திக்கப் போகும் இந்திய ஐடி நிறுவனங்கள்
வாஷிங்டன்: ஹெச் 1 பி மற்றும் எல் 1 விசா கட்டணங்களை அமெரிக்கா உயர்த்தி இருக்கிறது. இந்த விசா மூலம்தான் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு தங்கள் பணியாளர்களை அனுப்புகின்றன. இந்த கட்டண உயர்வால் சாப்ட்வேர் நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு அதிக அளவிலான ஊழியர்களை அனுப்புவதில் சிக்கல் வரும் என்று தெரிகிறது.
அமெரிக்கப் பொறியாளர்களை அதிகம் வைத்து செயல்பட வேண்டி வரும். இதனால் செலவீனம் அதிகரிக்கும் என்று நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
தற்போது உள்ள கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக 4 ஆயிரம் டாலர் செலுத்த வேண்டும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை யு.எஸ்.சி.ஐ.எஸ் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 18, 2015 ஆம் தேதி முதல் இந்த கூடுதல் கட்டணத்தை செலுத்துமாறு யுஎஸ்சிஐஎஸ் தெரிவித்துள்ளது. அதேபோல எல்-1ஏ மற்றும் எல்-1பி விசாக்களைப் பெற்று பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக 4,500 டாலர் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நிதியமைப்பு சட்டத்துக்கு பராக் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள், அமெரிக்காவில் பணியாற்ற எச்1பி விசா அவசியம். அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் கிளைகளைக் கொண்ட பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமானால், எல்1 விசா எடுக்க வேண்டும்.
இந்நிலையில், இந்த விசாக்களுக்கான கட்டணத்தை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை பிரிவு உயர்த்தி உள்ளது. ஹெச்1பி விசாவுக்கு கூடுதலாக 4 ஆயிரம் டாலரும், எல்1 விசாவுக்கு 4,500 டாலரும் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த கட்டண உயர்வு, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த நடவடிக்கையால், இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் 40 கோடி டாலர் கூடுதல் சுமை ஏற்படும் என்று கருதப்படுகிறது.