ஹெச் 1-பி விசாக்களில் விதி மீறியதா இன்போசிஸ், டிசிஎஸ் நிறுவனங்கள்? - விசாரணையில் குதித்த அமெரிக்கா
வாஷிங்டன்: விசா விதிமீறல் குற்றச்சாட்டு தொடர்பாக இன்போசிஸ், டி.சி.எஸ் நிறுவனங்களிடம் அமெரிக்க தொழிலாளர் துறை விசாரணையைத் துவக்கியுள்ளது.
அமெரிக்க சென்று பணிபுரிவதற்கான ஹெச்1-பி விசாவை பயன்படுத்தி இவ்விரு நிறுவனங்களும் முறைகேட்டில் ஈடுப்பட்டதாக தெரியவந்ததை அடுத்து அமெரிக்க தொழிலாளர் துறை விசாரணையைத் துவக்கியுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்விரு நிறுவனங்களும் அமெரிக்காவின் சதர்ன் கலிபோர்னியா எடிசன் என்ற மின் நிறுவனத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில் பணிகளை செய்து தருகின்றன.
ஹெச்1-பி விசாவை பயன்படுத்தி எடிசன் நிறுவனம், 500க்கும் மேற்பட்ட தன் பணியாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து விட்டு, குறைந்த சம்பளத்தில் இந்தியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறி போவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க தொழிலாளர் துறை விசாரணையை அடுத்து இந்த நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சரிவை சந்தித்தது.