இந்தியப் பெண் துணைத்தூதர் கைது: வருத்தம் தெரிவித்தது அமெரிக்கா
நியூயார்க்: இந்தியப் பெண் துணைத் தூதர் கைது செய்யப் பட்ட விவகாரத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.
நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருப்பவர் தேவயானி. இவர் விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காகப் போயிருந்தபோது சாலையில்வைத்து இவரைக் கைது செய்த அதிகாரிகள், கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப் பட்ட தேவயானியை ஆடைகளை அவிழ்த்து அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டதாகவும், மேலும் அவரை போதை அடிமைகளுடன் அடைத்து வைத்ததாகவும் தகவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து, இரண்டரை லட்சம் டாலர் பிணைப் பத்திரத்தில் ஜாமீனில் வெளி வந்தார் தேவயானி.
இந்தியத் துணைத் தூதரை இவ்வாறு நடத்தியது இந்தியாவையே அவமானம் செய்யும் செயல் என கொந்தளித்த இந்தியா, இது தொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது. ஆனால் தேவயானியின் கைது நடவடிக்கையை நியாயப் படுத்தியது அமெரிக்கா. இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்க துணைத்தூதரகங்களிலும் உள்ள அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் அனைவரும் தங்களது அடையாள அட்டைகளை உடனடியாக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது மத்திய அரசு. மேலும், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு மதுபானங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் இறக்குமதி ஒப்புதல்கள் நிறுத்தப்பட்டன.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டதுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு சலுகை பறிப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.
இந்தியாவின் அதிரடியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது இந்திய தூதரக அதிகாரியின் கைது நடவடிக்கையை மறு ஆய்வு செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், தேவ்யானி கைது விவகாரம் துரதிர்ஷ்டவசமானது என அமெரிக்கா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
அப்போது, அவர், ‘இந்தியத் துணைத் தூதர் கைது நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது. இதனால், இந்திய-அமெரிக்க உறவு பாதிக்கப் படாது' என உறுதியளித்துள்ளார்.