14 நாட்களில் உருவான.. உலகின் 2வது பிரமாண்ட கொரோனோ பரிசோதனை லேப்.. அபுதாபியில் திறப்பு
ரியாத்: உலகின் இரண்டாவது மிகப் பெரிய கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அபுதாபியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும்.
கொரோனா வைரஸால் ஐக்கிய அரபு நாடுகளில் 664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அபுதாபியில் மிகப் பெரிய கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டு அங்கு நாளொன்றுக்கு 600 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன.
முன்னதாக பாதுகாப்பு நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு இரு முறை சோதனைக்குள்படுத்தப்படுகிறார்கள். இதனால் வைரஸ் பரவலை தடுக்க மிகப் பெரிய பரிசோதனை கூடத்தை தொடங்க அந்நாட்டு அமைச்சரவை கடந்த 29-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.
இதன்படி, அபுதாபியில் மஸ்தார் நகரத்தில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய கொரோனா சோதனை கூடம் 14 நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூடம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை கூடத்தை அபுதாபியின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான பிஜிஐ மற்றும் குரூப் 42 ஆகியன இணைந்து அமைத்துள்ளது. இந்த பரிசோதனை மையம் வளைகுடா நாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் உதவும் என்கிறார்கள்.
இந்த பரிசோதனை கூடத்தில் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது ரியல் டைம் ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன்- பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (RT-PCR) மூலம் சோதனை செய்யப்படுகிறது. இந்த முறை மூலம் SARV-CoV வைரஸ் தொடர்பான அறிகுறிகளை வேகமாக கண்டறிந்துவிட முடியும்.
மருத்துவமனை எங்கும் மரண ஓலம்.. உலகிலேயே கொடூரம்.. பிரான்ஸில் ஒரே நாளில் 1355 பேர் உயிரிழப்பு
இந்த முறையிலான சோதனைதான் சீனா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் 2,20,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. உலகிலேயே எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு அதிகமானவர்கள் சோதிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறுகிய நாட்களில் கொரோனா பரிசோதனை மையத்தை ஏற்படுத்துவது, கொரோனாவை தடுப்பது உள்ளிட்ட சூட்சமங்களை சீனாவிடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் கற்றுக் கொண்டது. அபுதாபியில் உள்ள இந்த பரிசோதனை கூடம் உலகின் இரண்டாவது பெரிய பரிசோதனை கூடமாகும். சீனாவில் கொரோனா வைரஸ் சிகிச்சை, பரிசோதனைக்காக 6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனையை கட்டியது குறிப்பிடத்தக்கது.