வருங்கால மனைவியை வாட்ஸ் அப்பில் திட்டிய இளைஞர்.. ரூ. 4 லட்சம் அபராதம் கூடவே 6 0 நாள் சிறை!
வருங்கால மனைவியை திட்டியதால் இளைஞர் ஒருவர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அபுதாபி: வருங்கால மனைவியை வாட்ஸ் அப்பில் திட்டியதால் இளைஞர் ஒருவருக்கு இரண்டு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் திருமணத்திற்கான வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மணமகன் தனது வருங்கால மனைவிக்கு வாட்ஸ் அப்பில் அவ்வப்போது குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார்.
அப்படியாக சமீபத்தில் அரபு மொழியில் ஹப்லா என்ற வார்த்தையை அனுப்பியுள்ளார். இதற்கு தமிழில் முட்டாள் என அர்த்தம். இந்த செய்தியைப் படித்த மணமகள் கோபமாகி விட்டார். மணமகன் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக போலீசில் அவர் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில் தான் விளையாட்டாக அந்த வார்த்தையைக் கூறியதாக மணமகன் கூறியுள்ளார். ஆனபோதும், உண்மையில் ஒரு மனிதரை கடுமையான வார்த்தைகளால் திட்டும் அதிகாரம் இன்னொருவருக்கு இல்லை என்பதனால், அந்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, அந்த இளைஞருக்கு 22 ஆயிரம் திர்ஹாம்ஸ் ( நம்மூர் மதிப்பிற்கு இது ரூ. 4 லட்சம் ஆகும்) அபராதமும், கூடவே 2 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும் என்பது இது தான் போலும். ஒரே ஒரு வார்த்தையினால் மகிழ்ச்சியாக நடைபெற வேண்டிய திருமணம் தற்போது அங்கு நின்று விட்டது. பாவம், மாப்பிள்ளையும் மாமியார் வீட்டில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.