ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முதலாக தீவிரவாத தடுப்பு சட்டம் அறிமுகம்
துபாய்: தீவிரவாத தடுப்பு சட்டத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் கலிபா பின் ஜயீத் அல் நஹ்யான் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிரவாதத்திற்கு எதிரான சட்டம் இதுவரை இல்லை. இந்நிலையில் நாட்டின் முதல் தீவிரவாத தடுப்பு சட்டத்தை அந்நாட்டு அதிபர் கலிபா பின் ஜயீத் அல் நஹ்யான் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த சட்டத்தில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பது குறித்து தெரியவில்லை.
மத்திய கிழக்கு நாடுகளில் போராட்டங்கள், பிரச்சனைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 200 உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
எகிப்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலருக்கு அபுதாபியில் தண்டனை கிடைத்துள்ளது. எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடும் எகிப்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கண்டுபிடிக்க இருநாடுகளும் இணைந்துள்ளன.
கடந்த ஜனவரி மாதம் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 30 பேருக்கு ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றம் 3 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் தண்டனை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.