மோடியின் சுற்றுப் பயணத்தால் இந்தியாவில் ரூ.5 லட்சம் கோடி முதலீடு.. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒப்புதல்
துபாய்: பிரதமர் மோடியின் சுற்றுப் பயணத்தின் பலனாக இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு துறையில் ரூ.5 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி ஐக்கிய அரபு நாடுகளுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரபடுத்த இந்தியா-ஐக்கிய அமீரக நாடுகள் முடிவு செய்துள்ளன. இதுதவிர, ராணுவ ஆயுத தயாரிப்பில் ஒத்துழைப்பு வழங்கவும், இருநாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி மூலம் பாதுகாப்பை அதிகரிக்கவும், இருநாடுகளுக்கு இடையே உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இருநாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் 6 மாதத்திற்கு ஒருமுறை கூடி ஆலோசனை நடத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் 60 % வரை முதலீடுகளை அதிகரித்து அமீரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, அடிப்படை கட்டமைப்பு துறையில் ரூ.5 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1970-களில் இந்தியா-ஐக்கிய அமீரகம் இடையே 180 மில்லியன் டாலர்கள் அளவிற்கு வர்த்தம் நடந்து வந்தது. ஆனால், இன்று 60 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. 2014-2015 நிதியாண்டில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 3-வது மிகப்பெரிய வர்த்தக உறவு நாடாக ஐக்கிய அமீரகம் தற்போது மாறியுள்ளது.
இது இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தொழிற்சாலை கட்டடங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், சாலைகள், துறைமுகங்கள், ரயில்வே கட்டமைப்புகள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் வேகமான முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் இருநாடுகளின் தலைவர்களும் சந்தித்து கொண்டபிறகு இன்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.