கத்தாருக்கான விமான சேவையை நிறுத்தியது அமீரகத்தின் எதிஹாட் ஏர்வேஸ்!
கத்தாருக்கான விமான சேவையை அமீரகத்தின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது.
ரியாத்: கத்தாருக்கான விமான சேவையை அமீரகத்தின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது. கத்தார் உடனான தூதரக ரீதியிலான உறவுகள் அனைத்தையும் முறித்துக் கொள்ள பக்ரைன், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு ஆகிய 4 நாடுகள் முடிவு செய்துள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை துண்டிப்பதாக பக்ரைன், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு ஆகிய 4 நாடுகள் தெரிவித்துள்ளன. அடுத்த 48 மணி நேரத்திற்குள் கத்தார் உடனான அனைத்து தூதரக உறவுகளையும் முறித்துக் கொள்ள உள்ளதாக 4 நாடுகளும் அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து 48 மணி நேரத்தில் தங்களின் தூதரக அதிகாரிகள் திரும்பப்பெறப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. அதேபோல் பஹ்ரைனில் உள்ள கத்தார் மக்களும் 2 வாரத்துக்குள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
பஹ்ரைன் குற்றச்சாட்டு
கத்தார் உடனான விமான மற்றும் கடல்வழி போக்குவரத்தையும் படிப்படியாக நிறுத்த உள்ளதாகவும் பஹ்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் கத்தார் அரசு, செய்தி ஊடக ஊடுறுவல், ஆயத பயங்கரவாத நடவடிக்கை, பஹ்ரைனில் நாசவேலையை செய்திடவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் ஈரானிய குரூப்புகளுக்கு நியுதவி செய்வதாகவும் பஹ்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
எதிஹாட் ஏர்வேஸ் நிறுத்தம்
இதேபோல் சவுதி அரசும் நாட்டின் பாதுகாப்பு கருதி கத்தாருடனான அனைத்து உறவுகளும் முறித்துக்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஐக்கிய அரவு அமீரகத்தின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் கத்தாருடனான விமான சேவையை நிறுத்துவதாக தெரிவித்தள்ளது.
வளைகுடா நாடுகளின் அறிவிப்பால்..
முக்கிய வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரக நாடுகள் கத்தாருடனான தொடர்பை துண்டித்ததை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக எதிஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தோஹாவுக்கு நாள்தோறும் 4 முறை விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
மற்ற நிறுவனங்களும் முடிவு
துபாய் எமிரேட்ஸ் உட்பட மற்ற மூன்று வளைகுடா நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களும் தங்களின் சேவையை நிறுத்துவதாக அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் கத்தார் நாட்டு மக்கள் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கத்தார் கண்டனம்
இதனிடையே வளைகுடா நாடுகளின் இந்த நியாயப்படுத்த முடியாத அறிவிப்புக்கு கத்தார் நாடு கண்டனம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விரிசல் குழப்பத்தை ஏற்பத்தியுள்ளது.