செல்போனில் பேசியதற்காக பெண் பயணியை தாக்கி, காரை மோதிய உபேர் டிரைவர்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் போனில் பேசியதால் அவரை உபேர் டாக்சி டிரைவர் வாகனத்தில் இருந்து வெளியே தள்ளி அவரின் கால் மீது காரை இடித்துவிட்டு சென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சாஷ்சா பங்கல்லோ என்ற 24 வயது பெண் கடந்த 6ம் தேதி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல உபேர் டாக்சியை புக் செய்தார். டாக்சி டிரைவர் பால் சாஷ்சா செல்ல வேண்டிய இடத்தை ஜிபிஎஸ் மூலம் கண்டறிய மறுத்துள்ளார். மேலும் சாஷ்சாவே வழிகாட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சாஷ்சாவோ செல்போனில் பேசிக் கொண்டே பாலுக்கு வழி காட்டியுள்ளார். அவர் செல்போனில் பேசிக் கொண்டே இருந்ததால் பால் ஆத்திரம் அடைந்து அவரை டாக்சியில் இருந்து இழுத்து வெளியே தள்ளியுள்ளார். இதை சாலையில் சென்ற மக்கள் பார்ப்பதை உணர்ந்த பால் வேகமாக தனது சீட்டிற்கு சென்று டாக்சியை ஸ்டார்ட் செய்துள்ளார்.
இதற்கிடையே சாஷ்சா தனது உடைமைகளை டாக்சியில் இருந்து எடுத்துள்ளார். அப்போது பால் டாக்சியை கிளப்பி சாஷ்சாவின் காலில் இடித்துவிட்டு சென்றார். இதில் காயம் அடைந்த சாஷ்சா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் காயம் அடைந்த புகைப்படங்களை அவரே ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
தன் வாழ்க்கையில் இனி உபேர் டாக்சியில் பயணிக்கப் போவது இல்லை என்று சாஷ்சா தெரிவித்துள்ளார்.