உகாண்டாவில் குட்டைபாவாடைக்கு தடை- எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா சமூக பழைமைவாதிகள் நிரம்பிய நாடாகும். இங்கு கடந்த சில வாரங்களில் தொடை தெரியும் சிறிய உடைகளை அணிந்துசென்ற பெண்கள் கேலி செய்யப்பட்டும் பகிரங்கமாகத் துன்புறுத்தப்பட்டதுமான சில சம்பவங்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் யோவெரி முசேவெனி பெண்களுக்கான மினிஸ்கர்ட்டுகளைத் தடை செய்யும் ஆபாச எதிர்ப்பு மசோதா ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். இந்த வாரம்தான் அங்கு ஓரினச் சேர்க்கை மக்களுக்கான விதிமுறைகளையும் கடுமையாக்கிய ஒரு மசோதாவும் அதிபரின் கையெழுத்துடன் சட்டமாக்கப்பட்டது.
மினிஸ்கர்ட் தடை எனப்படும் இந்த புதிய சட்டத்திற்கான மசோதாவை சென்ற ஆண்டு முன்மொழிந்த அந்நாட்டின் அமைச்சர் சைமன் லோகோடோ முட்டிக்கு மேலே உடையணியும் பெண்களை கைது செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார். ஆனால், இந்தப் புதிய விதிமுறையை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் அந்நாட்டின் தேசியத் திரையரங்கம் முன்னால் கூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
அவர்களில் பலரும் சிறிய ஸ்கர்ட்டினை அணிந்துகொண்டு எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டிருந்த அட்டைகளையும் தாங்கியிருந்தனர். போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அகுமு காவல்துறையினராலேயே தான் கேலி செய்யப்பட்டதாகவும், துன்புறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
உகாண்டா நாட்டு சட்டம் இரு பாலினருக்கும் சம உரிமைகளை அளித்துள்ளதால் இந்தப் புதிய விதிமுறையை நீக்குவதற்காக நீதிமன்றம் செல்லப்போவதாக உகாண்டா மகளிர் நெட்வொர்க் நிர்வாக இயக்குனர் ரீட்டா அச்சிரோ தெரிவித்தார். அவர்கள் ஊர்வலம் செல்வதற்கு தடை விதித்த காவல்துறையினர் அங்கு குட்டை உடையணிந்து வந்திருந்த பெண்கள் கும்பலையும் விமர்சித்தனர்.
பெண்களின் போராட்டங்களைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் அந்நாட்டுப் பிரதமரும், அட்டர்னி ஜெனரலும் இந்த சட்டத்தை மறு ஆய்வு செய்வதற்காகத் திரும்பப் பெறும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளனர்.