தீயில் எரித்தும்.. விஷம் கொடுத்தும்.. உகாண்டா படுகொலைகள்... ஒரு குட்டி டெரர் தொடர் (3)
"எல்லோரும் வந்தாச்சா?"
"ஆமா வந்துட்டாங்க.. எல்லாம் ரெடியா இருக்கு"
"ஓகே.. நான் சொன்னதும் ஆரம்பிக்கனும்.. "
"சரி"
2000மாவது ஆண்டு மார்ச் 17.. உலகம் அழியப் போகிறது என்று கிளப்பி விட்டு அது நடக்காமல் போய் 3 மாதங்கள் கடந்திருந்த நேரம் அது. உகாண்டாவின் கனுங்கு என்ற ஒரு பகுதியில் 800 பேர் கூடியிருந்தனர். அவர்களில் 78 பேர் சிறார்கள்.
Stop... ஒரு பிளாஷ்பேக்...!
2000மாவது ஆண்டு பிறக்கும்போது உலகம் அழிந்து விடும். புல் பூண்டு கூட இந்த பூமியில் இருக்காது. எனவே நாம் எல்லோரும் அழியப் போகிறோம். அடுத்து நாம் போகப் போவது சொர்க்கம்தான். தயாராக இருங்கள்.. கடவுளின் பத்து கட்டளைகளை நிறைவேற்ற வந்தவர்கள் என்ற குழு கூறி வந்த பிரசாரம் இது. உகாண்டா முழுவதும் இந்த குழுவால் பெரும் பரபரப்பு நிலவி வந்த காலகட்டம் அது.
எப்போது 2000 வரும்.. எல்லோரும் எப்படி அழியப் போகிறோம் என்று பலரும் இவர்களை நம்பிக் காத்திருந்தனர். 1999 முடிந்தது.. 2000 பிறந்தது. யாருமே அழியவில்லை.. உலகம் மேலும் அழகாக 2000மாவது ஆண்டில் நுழைந்தது.
என்னடா இது உலகம் அழியவில்லையே என்று இந்த குரூப்பை நம்பியவர்கள் குழம்பி சந்தேகப் பார்வையைத் திருப்பினர். இதனால் திகிலடைந்த அந்த குரூப்பின் தலைவர்கள், கவலைப்படாதீர்கள்.. உலகம் அழிவதற்கான நாளை மாற்றி விட்டார்கள். மார்ச் 17ம் தேதிதான் அழியப் போகிறோம். எனவே அனைவரும் கடைசியாக ஒருமுறை கூடி பிரார்த்திப்போம்.. என்று கூறினர்.
அந்தநாள்தான் 2000, மார்ச் 17. கனுங்குவில் கூடியிருந்தவர்களிடையே அந்த குரூப்பின் தலைவர்கள் வெறியூட்டும் வகையில் பேசினர். அடுத்த பிறவி எப்படி இருக்கும். அதற்கு எப்படித் தயாராக வேண்டும் என்று கூறி விளக்கினர். வந்திருந்த கூட்டம் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தது. நடுக்கத்திற்கு இடையே நடனமும், ஆடல் பாடல்களும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன.
"எல்லாம் ரெடியா, ஆரம்பிக்கலாமா"
"ஆம் ரெடி.. ஆரம்பிச்சுடலாம்"
அடுத்து நடந்தது உகாண்டாவை அதிர வைத்தது. வந்த அத்தனை பேருக்கும் உணவு கொடுக்கப்பட்டது... அது உயிரைப் பறிக்கும் விஷம் கலந்தது. சாப்பிட்டவர்கள் செத்து விழுந்தனர். சாக முடியாமல் துடித்தவர்களை உயிரோடு தீவைத்துக் கொளுத்தினர். இதில் சிலர் தாங்களாகவே தற்கொலை செய்து கொண்டாலும் கூட பெரும்பாலானவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
அடுத்த சில நாட்களில் அந்த பகுதி முழுவதும் தோண்டத் தொண்ட பிணங்களாக வந்தன. உகாண்டாவை உலுக்கிய அந்த கோர சம்பவத்தில் மொத்தமாக 780 பேரின் உடல்களைப் போலீஸார் மீட்டனர்.