உகாண்டா நாடாளுமன்றத்தில் அதிபர் தூங்கியதை ஒளிபரப்பிய டிவி ஸ்டேஷனுக்கு தடை
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் முக்கிய தொலைக்காட்சி நிலையம் என்டிவி உகாண்டா. நேஷன் மீடியா குழுமத்தைச் சேர்ந்தது என்டிவி உகாண்டா. அது கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தன்னிச்சையான மீடியா குழுமம் ஆகும். அந்த தொலைக்காட்சி நிலையம் உகாண்டா அதிபர் யொவேரி முஸ்வெனி நாடாளுமன்றத்தில் கண் மூடி அமர்ந்திருக்கும் புகைப்படங்களை ஒளிபரப்பி அதிபர் தூங்குவதாக தெரிவித்தது.
இதையடுத்து அதிபர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப என்டிவி உகாண்டாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு மீடியா சென்டர் மேனேஜர் டென்னிஸ் கதுங்கி கூறுகையில்,
அதிபருக்கு சில பழக்கவழக்கங்கள் உள்ளன. அவர் தியானம் செய்வது அவர்களுக்கு தெரியும். அப்படி இருந்தும் அவர் நாடாளுமன்றத்தில் தூங்கியதாக தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நிரந்தரம் அல்ல என்றார்.
69 வயதாகும் யொவேரி கடந்த 1986ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதி முதல் உகாண்டாவின் அதிபராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.