யு.கே.வில் அட்டூழியம்: பார்வையற்ற 19 வயது பெண்ணை ஹோட்டலை விட்டு விரட்டிய மேனேஜர்
லண்டன்: இங்கிலாந்தில் 19 வயது பார்வையற்ற பெண் தாய் உணவகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 19 வயது பார்வையற்ற பெண் தனது வழிகாட்டி நாயான 2 வயது லாப்ரடாருடன் லிவர்பூல் பகுதியில் உள்ள ஈ ரா தாய் உணவகத்திற்கு சென்றுள்ளார். அந்த நாயின் கழுத்தில், என் கவனத்தை திசை திருப்ப வேண்டாம். நான் பணியில் உள்ளேன் என்று எழுதப்பட்டிருந்தது.
நாயுடன் வந்ததால் அந்த பெண்ணை உணவகத்தில் இருந்து உடனே வெளியேறுமாறு மேனேஜர் கூறியுள்ளார். அந்த நாய் தனது வழிகாட்டி என்று கூறியும் மேனேஜர் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அந்த பெண் வருத்தத்தோடு அழுதபடியே உணவகத்தை விட்டு வெளியேறினார்.
இந்த சம்பவத்தை அடுத்து பலரும் அந்த உணவகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் திட்டி கமெண்ட் போட்டுள்ளனர். இது குறித்து உணவகத்தின் பிராண்ட் மேனேஜர் ரெய்ச்சல் கிளார்க் கூறுகையில்,
வழிகாட்டி நாய்களை எங்கள் உணவகங்களுக்குள் அனுமதிப்போம். உணவகத்திற்கு வந்தவர் மற்றும் எங்களுக்கு இடையேயான விவாதம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
அந்த பெண்ணின் தாய் கூறுகையில்,
ஈ ரா தாய் உணவகத்தின் மேனேஜர் எனது மகளை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியதும் அவர் மனமுடைந்துவிட்டார். நகரில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அனைவரும் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார்.