கிரிமியாவுக்காக உக்ரைனுடன் அணு ஆயுதப் போருக்கு தயாராக இருந்த ரஷ்யா அதிபர் புதின்!!
மாஸ்கோ: உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை பாதுகாக்க அணு ஆயுதப் போருக்கும் ரஷ்யா அதிபர் புதின் தயாராக இருந்தார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைனின் தன்னாட்சி பகுதியாக இருந்து வந்த கிரிமியா பொது வாக்கெடுப்பு நடத்தி, ரஷ்யாவுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19-ந் தேதி இணைந்து கொண்டது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.
இதனைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைன் மாகாணங்களும் ரஷ்யாவுடன் சேர முடிவு செய்தது. ஆனால் இதற்கு உக்ரைன் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் கிழக்கு பகுதியில் உள்ள ரஷ்யா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் அரசு படைகளுடன் யுத்தம் நடத்தி வருகின்றனர். இதில் டுநெக்ஸ்ட் மற்றும் லுகான்ஸ்க் மாகாணங்களில் 2,500க்கு மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர்.
இதனிடையே ரஷ்யாவை சேர்ந்த தொலைக்காட்சி சேனல் ஒன்று ஆவணப்படத்தை ஒளிபரப்பியுள்ளது. அதில் கிரிமியாவை பாதுகாக்க ரஷ்யாவின் அணு ஆயுத படைகளை தயார் நிலையில் புதின் வைத்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா மும்முரகா இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக புதின் பேட்டி ஒன்றும் அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அதில், உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யானு கோவிச்சின் உயிரை காப்பாற்றியது ரஷ்யா..
கிரிமியா நமது வரலாற்று பிரதேசம் .நாங்கள் அதை செய்ய தயாராக இருந்தோம். ரஷ்ய மக்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். ஆபத்துகளை எதிர்கொண்டிருக்கும் அவர்களை நாம் கைவிட முடியாது என்று கூறியிருப்பதும் அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.