ஐ.நா. பாதுகாப்பு சபை... 5 நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கு உக்ரைன், ஜப்பான், எகிப்து உள்ளிட்ட நாடுகள்
நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு சபையில் உக்ரைன், ஜப்பான், எகிப்து உள்ளிட்ட ஐந்து நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளன.
நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது ஐ.நா. சபை. அதில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. 2 நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. இதில் பாதுகாப்பு கவுன்சில் என்பது 15 நாடுகளைக் கொண்ட அதிகாரமிக்க அமைப்பு ஆகும். இதில், இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷியா, அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. மீதி 10 இடங்கள், நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.
நிரந்தரமற்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு ஐநா சபையில் நடைபெற்றது. இதில் 193 உறுப்பு நாடுகளும் வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பில் ஜப்பான் 184 வாக்குகளும், எகிப்து 179 வாக்குகளும், உக்ரைன் 177 வாக்குகளும் பெற்றன.
அதனைத் தொடர்ந்து உக்ரைன், ஜப்பான், எகிப்து, செனகல், உருகுவே ஆகிய 5 நாடுகள் ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான அறிவிப்பு கிடைத்ததைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் பெட்ரோ தனது பேஸ்புக் பக்கத்தில், ‘ஆம், நான் செய்து விட்டோம்' எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதன் மூலம் தங்கள் நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாத்துக் கொள்ள புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இரண்டாண்டுகளுக்கு இந்த நாடுகள் ஐநா பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக இருக்கும்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தன்னை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்று ஜப்பான் நீண்ட காலமாக கோரி வருகிறது. ஆனால், இம்முறையும் அந்நாடு நிரந்தரமற்ற உறுப்பினராகவே தொடர்கிறது.