ரஷ்யா முழுங்கிய கிரிமியாவில் இருந்து படைகள் வாபஸ்- உக்ரைன் உத்தரவு!!
கீவ்: ரஷியாவுடன் இணைந்த கிரிமியா பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற உக்ரைன் இடைக்கால அதிபர் அலெக்ஸாண்டர் துர்ச்சினோவ் உத்தரவிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணையும் விவகாரத்தால் அந்நாட்டில் உள்நாட்டு கலவரம் வெடித்தது. இந்நிலையில் உக்ரைனின் சுயாட்சி பிரதேசமான கிரிமியாவுக்குள் ரஷிய படைகள் நுழைந்து கைப்பற்றின.
பின்னர் கிரிமியா நடத்திய பொதுவாக்கெடுப்பில் அப்பகுதி ரஷியாவுடன் இணைய ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முறைப்படி ரஷியாவுடன் கிரிமியா இணைக்கப்பட்டது.
இதன் பின்னர் கிரிமியாவின் பியோதோசியா கடற்படை தளத்தையும் ரஷியா கைப்பற்றியது. அப்போது அங்கு முகாமிட்டிருந்த உக்ரைன் படையினர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் உக்ரைன் பாதுகாப்புப் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்கும் வகையில் கிரிமியாவிலிருந்து ராணுவம் வாபஸ் பெறப்படுவதாக அந்நாட்டு இடைக்கால அதிபர் இன்று அறிவித்தார்.