போர் கொடூரம்.. எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே.. ரஷ்யாவிடம் சிக்கிய உக்ரைன் வீரர் நிலையை பாருங்க
கீவ்: போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரஷ்யாவால் உக்ரைன் வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ரஷ்யாவிடம் சிக்கிய எங்கள் வீரரின் நிலைமையை பாருங்க எனக்கூறி போட்டோ ஒன்றை உக்ரைன் வெளியிட்டு கவலையை பகிர்ந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி போரை துவங்கியது. 7 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.
இருநாடுகள் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர உலக தலைவர்கள் எடுத்து பல்வேறு முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. உக்ரைன்-ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையும் போரை முடிவுக்கு கொண்டு வரவில்லை.
2014-ல் ஜெ.வுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி குன்ஹா அதிரடி தீர்ப்பு அளித்த நாள் இன்று!
தொடரும் போர்
இதனால் தொடர்ச்சியாக ரஷ்யா, உக்ரைன் மீது போர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் போர் நடவடிக்கை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ரஷ்யா எல்லை மீறி செயல்பட்டு வருகிறது. பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மனிதாபிமானமற்ற வகையில் செயல்பட்டு வரும் ரஷ்யாவை உலக நாடுகள் ஒதுக்கி வைக்க வேண்டும் எனவும் உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
சிறை பிடிக்கப்படும் வீரர்கள்
இந்நிலையில் தான் போரின் ஒரு பகுதியாக உக்ரைன் வீரர்கள் தாய்நாட்டை காக்கும் நோக்கத்தில் ரஷ்யா வீரர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதில் ரஷ்யா வீரர்கள் பலியாகி உள்ளனர். அதேபோல் ரஷ்ய படைகளின் தாக்குதலில் உக்ரைன் வீரர்களும் ஏராளமானவர்கள் இறந்துள்ளனர். மேலும் ரஷ்ய படையினர் உக்ரைன் வீரர்களை சிறை பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சில வீரர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஏராளமானவர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலை உள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
ராணுவ வீரரின் நிலைமை
இந்நிலையில் தான் தற்போது உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் அந்த நாட்டின் வீரரான மிக்கைலோ டையனோவின் 2 போட்டோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் போட்டோவில் அந்த வீரர் ராணுவ உடையில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். 2வது படத்தில் அந்த நபர் எலும்பும் தோலுமாக மிகவும் மோசமான உடல்நிலையில் காட்சியளிக்கிறார். மேலும் உக்ரைன் வீரர் ரஷ்யாவிடம் பிடிபடுவதற்கு முன்பு, ரஷ்ய வீரர்களிடம் பிடிபட்ட பின்பு எனக் கூறியுள்ளது.
நாசிச மரபு
மேலும் அந்த பதிவில், ‛‛உக்ரைன் வீரர் மிக்கைலோ டையனோவ் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இதுவே, ஜெனீவா ஒப்பந்தத்தின்படி ரஷ்யா எப்படி நடந்து கொள்கிறது என்பதற்கான சாட்சியாகும். வெட்கக்கேடான நாசிச மரபுகளை ரஷ்யா எப்படி தொடர்ந்து பின்பற்றி வருகிறது என்பதற்கும் இந்த படம் சாட்சி'' எனக்கூறி ரஷ்யாவின் போர் கொடூரத்தை உக்ரைன் உணர்த்தி உள்ளது.
ஆபத்தான நிலையில் சிகிச்சை
அதாவது மரியுபோலில் நடந்த தாக்குதலின்போது ரஷ்ய படையினரால் பிடிக்கப்பட்ட உக்ரைன் வீரர்கள் 205 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் தான் மிக்கைலோ டையனோ. இவர் உக்ரைன் தலைநகர் கீவ் ராணுவ மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இந்த படம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பலரும் வருத்தம் மற்றும் உருக்கத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் போர் நடவடிக்கையை உடனடியாக ரஷ்யா கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.