உக்ரைனில் வன்முறை: வெளியேற்றப்படும் 300 தமிழர்கள் உள்பட 1000 இந்தியர்கள்
மாஸ்கோ: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் லுகன்ஸ்க் நகரில் இருந்து ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் லுகன்ஸ்க் நகரில் வசிக்கும் ஆயிரம் இந்தியர்களை வெளியேற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் 500 இந்தியர்கள் பெரும்பாலும் மாணவ, மாணவியர் உக்ரைனில் உள்ள லுகன்ஸ்க் நகரில் இருந்து கியிவ் நகருக்கு நேற்று கிளம்பினார்கள்.
லுகன்ஸ்கில் இருந்து வெளியேற்றப்படும் ஆயிரம் இந்தியர்களில் கேரளாவைச் சேர்ந்த 350 பேர், தமிழகத்தைச் சேர்ந்த 300 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 150 பேர், பஞ்சாபைச் சேர்ந்த 60 பேர், ஜம்மு காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த தலா 25 பேர் அடக்கம். மீதமுள்ளவர்கள் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
கிழக்கு உக்ரைனில் உள்ள டோனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு இந்தியர்களை மத்திய அரசு கடந்த வாரம் வலியுறுத்தியது. மேலும் உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
ரஷ்யா உக்ரைனுடன் இருந்த கிரிமீயாவை தன்னுடன் இணைத்துக் கொண்டதை எதிர்த்து ஒரு கும்பல் அரசுடன் மோதிக் கொண்டிருக்கிறது. கிரிமீயாவை விடுவிக்க கோரி கிழக்கு உக்ரைனில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
முன்னதாக லிபியாவில் போர் மூண்டபோது அங்கு வசித்த 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு தற்போது தான் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அதிக அளவில் வெளியேற்றப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.