பெரிய போருக்கு தயாராகுங்கள்.. உக்ரைன் - ரஷ்யா இடையே முற்றிய மோதல்.. படைகள் குவிப்பு!
உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் பெரிய போர் ஒன்று உருவாகும் நிலையில் உள்ளதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோசென்கோ தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
கெய்வ்: உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் பெரிய போர் ஒன்று உருவாகும் நிலையில் உள்ளதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோசென்கோ தெரிவித்து இருக்கிறார்.
உக்ரைன் - ரஷ்யா ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் ஒன்றாக இருந்த நாடுகள். தற்போது இந்த நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும், எல்லை பகிர்வு காரணமாகவும், இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
கடந்த வாரம் உக்ரைனை சேர்ந்த கடற்படை கிரிமியா அருகே சென்று கொண்டு இருந்த போது ரஷ்ய கடற்படையால் தாக்கப்பட்டது. அதோடு உக்ரைனை சேர்ந்த சிலர் இந்த தாக்குதலில் கைது செய்யப்பட்டனர்.
பிரச்சனை ஆனது
இவர்கள் எல்லோரும் தற்போது ரஷ்யாவில் சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுதான் ரஷ்யா உக்ரைன் இடையே பிரச்சனைக்கு காரணம். ரஷ்யா சர்வதேச விதிகளை மீறி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அதே சமயம் உக்ரைன் ரஷ்யாவின் கடல் பகுதிக்குள் எல்லை மீறி வந்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
நிறுத்தி உள்ளது
இதனால் தற்போது இரண்டு நாட்டு படைகளுக்கும் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா வேகமாக தங்களது கடற்படையை கடல் எல்லையில் உக்ரைனை நோக்கி குவித்து உள்ளது. அதேபோல் உக்ரைனும் தனது படைகளை ரஷ்யாவின் பக்கம் திருப்பி வருகிறது.
போர் அச்சம்
இதுகுறித்து உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோசென்கோ ''ரஷ்யா நம்முடன் போருக்கு தயாராகிவிட்டது. நமக்கும் ரஷ்யாவிற்கு இடையில் பெரிய போர் நடக்க வாய்ப்பு இருக்கிறது. நமது பாதுகாப்பு படைகள் எல்லாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்'' என்று வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்க அதிபர்
இந்த நிலையில் எப்போதும் போல பெரிய அண்ணன் அமெரிக்காவும் இதில் தலையிட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த வாரம் அவர் ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பதாக இருந்தது. இந்த பிரச்சனையால் இந்த சந்திப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது.