சர்க்கரைப் பொடியை வைத்து விளையாடிய கல்லூரி மாணவர்... "கொக்கைன்" என நினைத்து கைது செய்த போலீஸ்!
நியூயார்க்: அமெரிக்காவில் சர்க்கரைப் பொடியை வைத்து விளையாட்டுக் காட்டிய கல்லூரி மாணவரைப் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் ஜோனாதன் ஹாரிங்டன். பல்கலைக்கழக ஹாஸ்டலில் தங்கியிருந்த ஜோனாதன், தனது அறையில் கொஞ்சம் சர்க்கரைப் பொடியையும், சுருட்டிய டாலர் நோட்டையும் விளையாட்டாக வைத்திருந்தார்.
எதிர்பாராத விதமாக ஜோனாதன் அறையை போலீசார் சோதனையிட்டனர். அப்போது சர்க்கரைப் பொடியை கொக்கைன் போதைப் பொருள் என போலீசார் தவறுதலாக நினைத்தனர்.
அதேபோல், மேஜையில் சில ஆஸ்பிரின் மாத்திரைகளும் இருந்தது. அதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தவே, போதை மருந்து வைத்திருந்த குற்றத்திற்காக ஜோனாதனைக் கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜோனாதன் தான் அறையில் வைத்திருந்தது வெறும் சர்க்கரைப் பவுடர் தான் என்றும், குறும்பாக மேஜையில் அதனை வைத்திருந்ததாகவும் போலீசில் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த சர்க்கரை மாதிரியை அதிநவீன ஆய்வுக்காக போலீசார் அனுப்பியுள்ளது. ஆய்வு முடிவுகள் கிடைக்க சில மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. அதுவரை சிறையில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார் ஜோனாதன்.