தெற்கு சூடான் போரில் 9,000 சிறுவர்கள் பங்கேற்றனர்... ஐ.நா. அதிர்ச்சித் தகவல்
ஜூபா: தெற்கு சூடான் போரில் சுமார் ஒன்பது ஆயிரம் சிறுவர்கள் சண்டையிட்டதாக ஐ.நா. அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
தெற்கு சூடானில் அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையே 4 மாத காலம் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இதில் சுமார் 9 ஆயிரம் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மூன்று நாள் பயணமாக தெற்கு சூடானுக்கு சென்றிருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நவி பிள்ளை, கடந்த புதனன்று அந்நாட்டு அதிபர் சால்வா கிர் மற்றும் புரட்சிப்படை தலைவர் ரெயிக் மச்சார் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் நவி பிள்ளை. அப்போது அவர் கூறியதாவது:-
போரில் சிறுவர்களின் பங்கு...
இரு தரப்பினரும் போருக்காக 9 ஆயிரம் சிறுவர்களை தேர்வு செய்தது குற்றம். கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
கவலை அளிக்கும் பஞ்சம்...
நாட்டில் நிலவும் பஞ்சம் கவலை அளிப்பதாக உள்ளது. ஆனால், இரு தலைவர்களுக்குமே அதைப்பற்றிய கவலை இல்லை.
தலைவர்கள் தான் பொறுப்பு...
இந்த ஆண்டு இறுதியில் மேலும் பஞ்சம் அதிகரித்து மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இதற்கு நாட்டின் தலைவர்கள்தான் பொறுப்பாவார்கள்.
வாக்குறுதி மீறல்...
மோதல்களை நிறுத்த ஜனவரி மாதம் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். ஆனால், அதனை அவர்கள் மீறியதுடன் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.