ஈராக்கில் சிறுபான்மையினர் மீதான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரின் பாலியல் வன்முறைகள்- ஐ.நா. கண்டனம்
நியூயார்க்: ஈராக்கில் யாஸிதிகள், கிறித்துவர்கள் உட்பட சிறுபான்மையினர் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் கட்டவிழ்த்துவிட்டுள்ள பாலியல் வன்முறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. அத்துடன் சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை இணைத்து இஸ்லாமிய தேசம் என்று பிரகடனம் செய்துள்ளது.
தங்களது இயக்கத்தின் பெயரையும் இஸ்லாமிய தேசம் என்று மாற்றியுள்ளனர். தற்போது இந்த இஸ்லாமிய தேசம் இயக்கத்தினர் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
கட்டாய மதமாற்றம்
யாஸிதிகள், கிறித்துவர்கள் உள்ளிட்டோர் கட்டாயமாக இஸ்லாத்தை பின்பற்ற வேண்டும் அல்லது வரி செலுத்த வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க மறுத்து அகதிகளாக தப்பி ஓடிய யாஸிதிகள் பசிக் கொடுமையால் வெயிலில் சுருண்டு கொத்து கொத்தாக மடிந்து வருகின்றனர்.
அமெரிக்கா தாக்குதல்
இதனையடுத்து இஸ்லாமிய தேசத்தினர் மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியது. சர்வதேச நாடுகள் யாஸிதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.
பாலியல் வன்முறைகள்
இந்நிலையில் சிறுபான்மையினத்தவர் மீது பாலியல் வன்முறைகளையும் இஸ்லாமிய தேசம் இயக்கத்தினர் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
விடுவிக்க வேண்டும்
இது தொடர்பாக ஐ.நா. சபையின் 'மோதல்களில் பாலியல் வன்முறை' தொடர்பான விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதி ஜைனாப் ஹவா பங்குரா, ஐ.நா. பொதுச்செயலரின் ஈராக் பிரதிநிதி நிக்கோலய் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், 1,500 யாஸிதிகள் மற்றும் கிறித்துவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு இஸ்லாமிய தேசம் இயக்கத்தினர் கட்டாயப்படுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் வசம் உள்ள சிறுமிகளையும் பெண்களையும் உடனே விடுவிக்க சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும்.
நிவாரணங்கள் சென்றடைய வேண்டும்
மலைக் குன்றுகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களால் குர்திஷ்தான் பகுதிகளை சென்றடைய முடியாமல் போராளிகளுக்கும் மலைகளுக்கும் நடுவே சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் உண்ண உணவும் குடிக்க நீரும் இன்றி தத்தளித்து வருகின்றனர். அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் சென்றடைய வேண்டும் என்று கூறியுள்ளனர்.