உள்நாட்டுப் போரால் ஈராக் பிளவுபடும் அபாயத்தில் உள்ளது : ஐ.நா. சபை எச்சரிக்கை
பாக்தாத்: ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரால் அந்நாடு பிளவுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.
ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையேயான மோதல் தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா அரசுக்கு எதிராக சதாம் ஆதரவுப் படையான சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே அவர்கள் மொசூல், கிர்குக், திக்ரித், சாதியா, ரமாடி சமர்ரா, ஜலாலா உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றி தங்கள் பிடியில் வைத்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றுவதில் தீவிர முனைப்பாக உள்ளனர்.
இதற்கிடையே ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் அமெரிக்க நாட்டவரைப் பாதுகாக்க 275 ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. அத்துடன் பெர்சிய வளைகுடா பகுதிக்கு போர்க்கப்பலையும் அனுப்பியுள்ளது அமெரிக்கா.
இந்நிலையில், இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ஈராக் பிளவு படும் அபாய நிலை உருவாகும் என ஐ.நா.சபை எச்சரித்துள்ளது. ஈராக்கில் உள்ள அரசியல் மற்றும் மத தலைவர்கள் கலவரத்தை தூண்டும் செயலை கைவிட வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய சூழலில் இந்த உள்நாட்டுப் போரினால் ஈராக் மூன்றாக பிரிவதற்கு வாய்ப்பிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஈராக்கிடமிருந்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற குர்திஷ் மாகாணம் இந்த உள்நாட்டுப் போரை பயன்படுத்தி தனிநாடு பிரகடனத்தை வெளியிட அல்லது விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக குர்திஷ் மாகாண பிரதமர் கூறுகையில், ‘இனி நாடு பழைய நிலைக்கு திரும்புவது முடியாத காரியம். எங்களுக்குரிய குர்திஷ் மாகாணம் முழுமையாக எங்களுக்கே கிடைக்க அரேபிய நாடுகளின் சன்னி பிரிவினர் உதவ வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஈராக் பிளவு படும் நிலைக்குத் தள்ளப்பட்டால் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வாழும் பகுதி, சன்னி பிரிவு முஸ்லிம்கள் வாழும் பகுதி மற்றும் குர்து இன மக்கள் வாழும் பகுதி என மூன்றாக பிளவு படும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.