இன்று தொடங்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை போர்க்குற்ற விசாரணை அறிக்கை தாக்கல்
கொழும்பு : போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா., விசாரணை அறிக்கை, இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில், கடந்த 2009 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக நடந்த இறுதிப் போரில், நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை, ஐ.நா., விசாரணைக்குழு விசாரித்து, அறிக்கை தயாரித்துள்ளது.
இந்த அறிக்கை, இலங்கை அரசிடம் கடந்த இரு நாட்களுக்கு முன் அளிக்கப்பட்டது. அறிக்கையும், அது குறித்து, இலங்கை அரசு அளிக்கும் பதிலும், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், இன்று தொடங்க உள்ள, ஐ.நா., மனித உரிமைக் கவுன்சிலின், 30வது கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
'ஐ,நா., சமர்ப்பிக்கும் அறிக்கை குறித்து பதில் அளிக்க, இலங்கை அரசுக்கு ஐந்து நாள் கால அவகாசம் உள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெனீவாவில் நடக்கும் கூட்டத்தில், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா, சுகாதாரத் துறை அமைச்சர் ராஜிதா சேனரத்னே உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இக்கூட்டத்தில், இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக உள்ள, தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.