இலங்கை தொடர்பான அமெரிக்கா தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?
ஜெனீவா: மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக காமன்வெல்த் நாடுகளின் நீதிபதிகளைக் கொண்ட நீதி விசாரணை அமைப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளன.
இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, போலந்து, மோண்டிநீக்குரோ, கானா, மாசிடோனியா உள்ளிட்ட 25 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் பேசிய இந்திய பிரதிநிதி, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், இலங்கை பன்மொழி, பல்வேறு இனங்களைக் கொண்ட நாடாக நீடிக்கவும் இந்தியா ஆதரவு தரும்; 13வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இத்தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையர் அளித்துள்ள அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
- இதன்படி காமென்வெல்த் நாடுகளின் நீதிபதிகள் மற்றும் இலங்கை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
- மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு வழக்கறிஞருடன் கூடிய நீதி விசாரணை அமைப்பை ஏற்படுத்துவதாக கூறியிருக்கும் இலங்கை அரசின் உறுதிமொழிக்கு பாராட்டு.
- இலங்கை அரசின் உறுதிமொழிகளை அமல்படுத்த அந்நாட்டு நீதித்துறையில் சீர்த்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.
- இலராணுவத்தின் வசம் உள்ள நிலங்களை உரிமையாளர்களுக்கு விரைவில் திருப்பித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ராணுவத்தின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.
- காணாமல் போனவர்கள் பற்றிய சர்வதேச சட்டத்துக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
- 13வது அரசியல் சட்ட திருத்தப்படி அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- இந்த பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் செயல்படுத்துவதை ஐ. நா மனித உரிமை ஆணையம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
- 18 மாதங்களுக்குப் பிறகு முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் விவாதம் நடத்த வேண்டும்.