இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளில் நம்பகத்தன்மையை எதிர்பார்க்கும் ஐநா
நியூயார்க்: இலங்கை நடத்துகிற போர்க்குற்ற விசாரணைகள் நம்பகத்தன்மையை எதிர்பார்ப்பதாக ஐநா சபை பொதுச்செயலரின் உதவி செய்தித் தொடர்பாளர் ப்ர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் சித்ரவதை செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக சர்வதேச அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட விசாரணை குழுவை வலியுறுத்தி வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை ஒப்புக் கொள்ளமாட்டோம் என கூறியிருப்பது குறித்து பர்ஹான் ஹக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது பதிலளித்த ஹக், இலங்கையின் விசாரணையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தப்பட வேண்டுமெனில் சர்வதேச நீதிபதிகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என ஐநா சபை பொதுச்செயலர் வலியுறுத்தியுள்ளார்.
ஐநாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் விசாரணையில் நம்பகத்தன்மை இருக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு என்றார்.