உள்நாட்டு அரசியல் குழப்பம் நிலவும் நாடுகளுக்கு ஐ.நா. அமைதிப்படையை அனுப்பக் கூடாது: இந்தியா
நியூயார்க்: உள்நாட்டு அரசியல் குழப்பம் நிலவும் நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைதிப் படையின் வீரர்களை அனுப்பக் கூடாது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி பேசியதாவது:
உள்நாட்டு அரசியல் குழப்பம் நிலவும் பல்வேறு நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை வீரர்கள் அனுப்பப்படுகின்றனர். இதனால் அமைதிப் படை வீரர்களின் உயிருக்கு ஆபத்து, அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
உலக அமைதியைக் காக்க வேண்டிய முக்கியமான பணிகளுக்கு மட்டுமே அமைதிப் படையை பயன்படுத்த வேண்டும். அமைதிப்படையை வழி நடத்துவதில் தலைமை அமைப்பு இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
அமைதிப் படைக்கான பணிகளைத் திட்டமிடும்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் கலந்தாலோசிக்க வேண்டும். அமைதி காக்கும் பணிகளில் இந்தியாவின் அனுபவம் பயனுள்ளதாக இருக்கும்.
ஐ.நா. பட்ஜெட்டில் அமைதிப் படை வீரர்களின் பராமரிப்புச் செலவுக்காக போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அசோக் முகர்ஜி பேசினார்.