இலங்கை மீதான விசாரணையில் கவலைதரும் தகவல்கள்- புதனன்று அறிக்கை வெளியீடு: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர்
ஜெனிவா: இலங்கை மீதான மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையில் கவலை தரும் தகவல்கள் கிடைத்துள்ளன; இந்த அறிக்கை நாளை மறுநாள் புதன்கிழமையன்று வெளியிடப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அல்ஹூசைன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 30வது கூட்டம் இன்று ஜெனிவாவில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய அல் ஹூசைன் இலங்கை தொடர்பாக கூறியதாவது:
6 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி காலத்தில் (2006-2009) மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகளை எதிர்கொண்டோம். அந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான ஒரு நகர்வாக, பொறுப்புக்கூறல் அவசியம் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஆழமான செயல்பாட்டில் இறங்கியது.
2014 மார்ச்சில் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயலகம் மேற்கொண்ட விரிவான விசாரணை அறிக்கை மற்றும் பரிந்துரைகள் வரும் புதன்கிழமை வெளியிடப்பட உள்ளது. இந்த விசாரணையின் முடிவுகளில் கவலை தரும் தகவல்கள் இடம்பெறும்.
இந்த விவகாரத்தில் கடந்த ஜனவரியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அக்கறையையும், அவரது தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வாக்குறுதிகளையும் வரவேற்கிறேன்.
இவ்வாறு அல்ஹூசைன் தெரிவித்துள்ளார்.